`Trump, வெனிசுலாவின் தற்காலிக அதிபர்' - ட்ரம்ப்-ன் சமூக வலைதளப் பதிவால் எழுந்த ச...
`இரட்டை இலை' பானை; நயினார் செயலால் அண்ணாமலை ஷாக் - கோவை பாஜக பொங்கல் விழா ஹைலைட்ஸ்!
பாஜக அகில இந்திய செயல் தலைவர் நிதின் நபின் 2 நாள்கள் பயணமாக நேற்று முன் தினம் கோவை வந்தார். சனிக்கிழமை மாலை தனியார் கல்லூரியில் ஒரு நிகழ்ச்சி, பாஜக சக்தி கேந்திர நிர்வாகிகள் கூட்டம், பாஜக மாநில மையக்குழு கூட்டம் ஆகியவற்றில் நபின் கலந்து கொண்டார்.

நேற்று வடவள்ளி பகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவிலும் அவர் பங்கேற்றார். பிறகு மருதமலை, பேரூர் கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு டெல்லி சென்றுவிட்டார். இவற்றில் பொங்கல் நிகழ்ச்சி தான் செம ஹைலைட்.
அந்தப் பகுதியில் காளை மாடு, எருமை மாடு சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. சாலையின் 2 பக்கமும் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்திருந்தனர். மேடையில் 5 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டன.. அந்த பானையில் இரட்டை இலை வரையப்பட்டிருந்தது. தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் போன்ற நிர்வாகிகள் முதலில் வந்து, வள்ளி கும்மி ஆடி பொங்கல் வைத்தனர்.

மேடையின் நடுவில் இருந்த பானையில் நபின் அரிசி, வெல்லம் ஆகியவற்றை போட்டார். வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையுடன் வந்த நபின் மிகவும் கஷ்டப்பட்டு “பொங்கலோ பொங்கல்.. பொங்கல் வாழ்த்துகள்” என்று தமிழில் சொன்னார்.
நபின் பேசிக் கொண்டிருக்கும்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துண்டு அணிவித்து மரியாதை செலுத்த முயற்சித்தார். “அண்ணே முதலில் தலைவருக்கு போடுங்க” என்று அந்த துண்டை அண்ணாமலை அவரிடமே கொடுத்துவிட்டார்.

அதன் பிறகு நயினார் நபினுக்கு துண்டு அணிந்து மரியாதை செலுத்தினார். சிறிது நேரத்தில் இன்னொரு துண்டு வந்தவுடன் நயினார், அண்ணாமலை பரஸ்பரம் துண்டு மரியாதை செலுத்தினார்.
வரவேற்புரையாற்றிய அண்ணாமலை தமிழிசை பெயரை மறந்துவிட்டார். நயினார் அதை நினைவூட்ட அப்போது அண்ணாமலை,”நமக்கு பிடித்தவர்களை அவ்வபோது மறந்துவிடுவோம். அப்படித்தான் தமிழிசை அக்கா” என்று சொல்லி சமாளித்தார்.

நேற்று காலை கோவையில் மழை பெய்தது. தமிழிசை பேசும்போது, “இங்கு அனைத்து தலைவர்களும் உள்ளனர். பாஜக வந்தவுடன் கோவையில் சூரியன் மறைந்துவிட்டது. மழை கொட்டி நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.
கடைசியாக உறியடிக்கும் நிகழ்வு நடைபெற்றது. முதலில் நயினார் நாகேந்திரன் வேட்டியை மடித்துக் கட்டினார். நபினுக்கு நயினார் கண் கட்டிவிட்டார். அண்ணாமலை, “யார் கயிறு பிடித்திருக்கிறீர்கள். நான் எப்போது சொல்கிறேனோ ஏற்றி இறக்க வேண்டும்” என்று கூறினார். 4-5 முயற்சிகளில் நபின் பானையை தொட்டுவிட்டார்.

பானை உடையவில்லை. அவரிடம் இருந்து குச்சி வாங்கி நயினார் பானையை உடைத்தார். அவர்கள் அங்கிருந்து செல்லும்போது இரட்டை இலை அடையாளத்துடன் இருந்த பானை கரியாகியிருந்தது.!













