INDvSA: 549 டார்கெட்; சொந்த மண்ணில் வரலாறா, வரலாற்றுத் தோல்வியா - இந்தியாவின் அத...
இறுதிச்சடங்கில் கவிழ்ந்த வாகனம்; `சுடுகாட்டுக்கு சாலை' கேட்டு தொடர்ந்து போராடும் கிள்ளியூர் மக்கள்
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் உள்ள கிள்ளியூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் பயன்படுத்தும் சுடுகாட்டிற்கான பாதை கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், இறந்தவர்களின் உடலை சேறும் சகதியுமாக உள்ள வயல்வெளிகளை கடந்து சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை உருவாகி, பட்டியலின மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த நவம்பர் 21 ஆம் தேதி கிள்ளியூர் தோப்புத் தெருவைச் சேர்ந்த துரைக்கண்ணு (90) என்ற முதியவர் வயது முதிர்வால் காலமானார்.
அவரது உடலை வாகனத்தில் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றபோது, முன்னால் மலர் தூவிச் சென்ற (TATA Ace) வாகனம் சேற்றில் சிக்கி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வாகனத்தின் உள்ளிருந்தவர்கள் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாத நிலையில், கயிறு கட்டி கவிழ்ந்த வாகனம் மீட்கப்பட்டது. உள்ளிருந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். மறுபுறம், முதியவர் உடலை ஏற்றி சென்ற வாகனமும் சேற்றில் சிக்கி, மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டு, உடல் அடக்கம் செய்யப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், கிள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமாரிடம் நடந்த சம்பவம் குறித்து பேசினோம். ''எங்களின் கிள்ளியூர் தோப்புத்தெருவில், 100 குடும்பங்களுக்கு மேல் வசித்துவருகிறோம். நாங்கள் பயன்படுத்தும் சுடுகாடு சாலை இன்றைக்கும் மண் சாலையாக உள்ளது.
இதுவரை சீரமைக்காப்படாமல், சுமார் 20 ஆண்டுகளாக மிகவும் மோசமான நிலையில்தான் தொடர்கிறது. முறையான சாலைக்காக நாங்கள் நிறைய போராட்டம் நடத்தியிருக்கிறோம். பல முறை மனுக்களும் கொடுத்திருக்கிறோம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுத்தபாடில்லை. சமீபத்தில் கடந்த அக்டோபர் மாதம் (07/10/2025 ) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அமைப்புடன் சேர்ந்து வட்டாசியரிடம் கோரிகை மனு அளித்தோம்.
அதற்கும் அதிகாரிகள் முறையாக பதில் அளிக்காத காரணத்தால், நவம்பர் 12 ஆம் தேதி (12/11/2025 ) அன்று ஊராட்சி மன்ற அலுவலகத்தைப் பூட்டு போடும் போராட்டதை அறிவித்தோம்.
உடனே, அதற்கு முந்தய நாளான நவம்பர் 11 ஆம் தேதி (11/11/2025) மாலை 6 மணி அளவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவாரத்தை நடைபெற்றது.
வட்டாச்சியர் இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் (BDO), காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் , கிராம நிர்வாகம் அலுவலர் திலகவதி, (VAO) ஆகியோர் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில், சாலையை சரி செய்வதற்கு நிதி இல்லை என்று BDO பாஸ்கர் கூறினார்.

இருப்பினும், தற்காலிகமாக சுடுகாடு பாதை மட்டம் செய்து தரப்படும் என்றும், அடுத்த பத்து நாள்களுக்குள் வேலை நடைபெறும் என்றும், வாக்குறுதி கொடுத்தனர்.
இந்த வாக்குறுதிக்கு வட்டாச்சியர் இளங்கோவன் உட்பட முன்னிலை வகித்த அதிகாரிகள் அனைவரும் கையெழுத்து போட்டு ஒப்புதலும் வழங்கினர்.
ஆனால், பத்து நாள் முடிந்த நிலையிலும் எந்த முன்னெடுப்பையும் எடுக்காத சூழலில்தான், எங்கள் கிராமத்து முதியவர் துரைக்கண்ணு இறந்தார்.
அவரது உடலை மீண்டும் அதே வழியில்தான் வாகன விபத்தில் சிக்கி மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் எடுத்துச் சென்று அடக்கம் செய்தோம். இதுவரை அரசாங்கம் நாங்கள் கேட்ட சாலையை போட்டுத்தர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரசாங்கம் எங்களுக்காக எந்த ஒரு முயற்சியும் எடுக்க வில்லை. விரைந்து இந்த அவலநிலை தொடராமல், போர்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க வேண்டும்!'' என்று செல்வகுமார் கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, அமைதிப் பேச்சுவார்த்தில் பங்கேற்ற (BDO) வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரனிடம் விளக்கம் கேட்டோம். ''அந்த சுடுகாடு பாதை ஒரு கிலோ மீட்டர் நீளம் கொண்டது. அது சாலையே கிடையாது. அருகாமையில் உள்ள விவசாய நிலங்களின் வரப்புதான்.
அந்த பாதை மற்றும் அதன் நடுவே உள்ள சிறிய வாய்க்கால் பாலத்தையும் சேர்த்து சீரமைக்க தேவையுள்ளது. இதற்கு சில பிரச்னைகளும் உள்ளது.
சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அப்பகுதி விவசாய நில உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் சம்மதத்தோடு அங்கு சாலை அமைப்பது பொருத்தமாக இருக்கும்.

ஏனென்றால் ஒரு சாலை அமைப்பதற்கு குறைந்தபட்சம் மூன்று மீட்டர் அகலம் இருக்க வேண்டும். ஆனால், அந்த சுடுகாடு பாதை அவ்வளவு அகலம் கொண்டது இல்லை. அதனால், வருகிற ஜனவரி மாதம் 26 ஆம் தேதி நடைப்பெறுகிற கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அதன் மூலமாக அதே மாதத்தில் பணிகளை துவங்கப்படும்'' என்று வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் கூறினார்.

















