சென்னை: தங்கக்காசு மோசடியில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது - அடுத்து சிக்கப் போவ...
உயிர்வாழ ஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஆட்டோ ஓட்டும் 72 வயது முதியவர்; கேரளத்தில் கவனம் ஈர்த்த முகமது!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம், பறம்பில் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது (72). அவரால் சாதாரணமாக காற்றைச் சுவாசிக்க முடியாது என்பதால், ஆக்ஸிஜன் சிலிண்டரைத் தனது இருக்கையின் பின்பக்கம் இணைத்து, முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் பொருத்தியபடி பயணியர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.
முகமது முதன்முதலில் 1976-ம் ஆண்டு ஆட்டோ ஓட்டத் தொடங்கினார். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுகளாக கோழிக்கோடு சாலைகளில் பயணித்து வரும் இவருக்கு, ஆட்டோ ஓட்டுவதுதான் வாழ்வாதாரம். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவரது வாழ்க்கை கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தலைகீழாக மாறியது.
2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு செலுத்திக்கொண்ட பிறகு எதிர்பாராதவிதமாக அவரது உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்தது. ஆக்ஸிஜன் அளவு வெறும் 24 ஆகக் குறைந்ததால் நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, அதே ஆண்டு அக்டோபர் 17 முதல் தொடர்ந்து 7 நாள்கள் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மரணத்தின் விளிம்பிற்குச் சென்று உயிர் பிழைத்துத் திரும்பிய முகமதுவிற்குச் சாதாரணமாகச் சுவாசம் எடுத்துக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் சுவாசிக்கும் நிலை ஏற்பட்டது. அன்றிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர் அவருக்கு உயிர் கொடுக்கும் தோழனாக மாறிப்போனது.

ஆக்ஸிஜன் சிலிண்டருடன் வீட்டிலேயே முடங்கியவரை மன அழுத்தம் வாட்டியது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் சந்தோஷ் அவ்வப்போது முகமதுவுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்துவந்தார்.
முகமதுவின் நிலைமையை உணந்த டாக்டர் சந்தோஷ், "வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால் நீங்கள் மேலும் நோயாளியாகி விடுவீர்கள், எனவே ஆட்டோவை எடுத்துக்கொண்டு வெளியே கிளம்புங்கள்" என்று ஊக்கமும், தைரியமும் அளித்தார்.
இதையடுத்து மீண்டும் ஆட்டோ ஓட்ட முடிவுசெய்த முகமது மருத்துவரின் ஆலோசனைப்படி தனது ஆட்டோவில் ஓட்டுநர் இருக்கையின் பின் பகுதியில் ஆக்ஸிஜன் சிலிண்டரைப் பொருத்திக்கொண்டார். முகத்தில் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தபடி இப்போது ஆட்டோ ஓட்டிவருகிறார்.

முகமதுவிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவருடைய மூத்த மகனும் தந்தையைப் போல ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிகிறார், இளைய மகன் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். முதுமையும் நோயும் மனிதனை முடக்கிவிட நினைக்கும். ஆனால் தளராத மனவலிமை இருந்தால் எதையும் எதிர்கொள்ளலாம் என்பதற்கு முகமதுவின் வாழ்க்கை சிறந்த எடுத்துக்காட்டு என கோழிக்கோடு மக்கள் சிலாகிக்கின்றனர்.
ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஆட்டோ ஓட்டும் முகமது எந்த நிலை வந்தாலும் தளர்ந்துவிடக்கூடாது, ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என கேரள மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருக்கிறார்.















