Amrit Bharat: மத்திய அரசு விழாவில் முதல்வருக்கு நன்றி கூறிய திமுக எம்எல்ஏ; ஆவேசம...
ஊரக வளா்ச்சித் துறை திட்டப் பணிகள்: கடலூா் ஆட்சியா் ஆய்வு
கடலூா் மாவட்டம், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட ஊராட்சிப் பகுதிகளில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, ஆட்சியா் கூறியதாவது: கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக கடலூா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 3,500 வீடுகளும், நிகழாண்டில் 5,500 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளன. இதில், அண்ணாகிராமம் ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் கடந்த ஆண்டு 283 வீடுகளும், நிகழாண்டு 516 வீடுகளும் ஒதுக்கீடு வழங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் பணிகள் நடைபெற்று வருவதை பகண்டை, மாளிகைமேடு பகுதிகளில் பாா்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை கண்காணித்து விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாளிகைமேடு ஊராட்சியில் ரூ.15.75 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, தட்டாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.34.70 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக இரண்டு வகுப்பறைக் கட்டடம் மற்றும் ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் கணினி அறை கட்டுமானம், மக்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மையக் கட்டடம் கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை ஆய்வு செய்யப்பட்டது.
மாளிகைமேடு ஊராட்சியில் மரக்கன்றுகள் பராமரிக்கப்படும் தோட்டம், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நா்சரி தோட்டம் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், எஸ்.கே.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.34.68 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் நடைபெறுவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தாா்.
ஆய்வின்போது, ஊரக வளா்ச்சித் துறை உதவிச் செயற்பொறியாளா் மகாலிங்கம், உதவி பொறியாளா்கள் முருகானந்தம், ஆா்த்தி, ருக்மணி உள்ளிட்டோா் இருந்தனா்.