சிப் தயாரிக்க உதவும் Polysilicon-க்கு வரி விதிக்கும் அமெரிக்கா; சீனாவிற்கு நெருக...
``என் அனுமதியின்றியே பாஜக தலைவர்கள் என் புகைப்படத்தை வெளியிட்டார்கள்" - சோனம் வான்சுக்
மத்திய அரசைக் கண்டித்து சிஜேபி முன்னெடுத்தப் போராட்டத்துக்கு ஆதரவளித்து, உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார் சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக். அமைச்சரின் ராஜினாமாவைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், சோனம் வங்சுக் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில், ``எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்பே எனது உண்ணாவிரதத்தை முடிக்க நாங்கள் பரிசீலித்தோம். அதற்காகவே ராகுல் காந்தியை தொடர்புகொள்ள அனைத்து வழிகளிலும் என் மனைவி கீதாஞ்சலி முயற்சி செய்தார். அவர் ராகுலுக்கு எதிரானவர் அல்ல. ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து நேர்மறையான பதில் எதுவும் வரவில்லை.
காங்கிரஸ் தலைமை குறித்த எனது மனைவியின் கருத்துகள் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், இந்தப் பின்னணியைப் புரிந்துகொள்வது மிக முக்கியம் எனக் கருதுகிறேன்.
ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாணவர் தலைவர்கள் முன்னிலையில் உண்ணாவிரதத்தை நிறைவு செய்வதே எனது தொடக்க திட்டமாக இருந்தது. உண்ணாவிரதத்தை முடிக்க மத்திய அமைச்சர்கள் நள்ளிரவுக்குப் பிறகு வந்தபோது, `எனது அறிவிப்புக்கு முன் எந்தப் படங்களையும் வெளியிடக் கூடாது, எதிர்க்கட்சித் தலைவர்களின் படங்களுடன் எனது இந்தச் செய்தி வெளியிடப்படும்' என்று அவர்களிடம் சொன்னேன்.
ஆனால், அதற்கு முன்பே மத்திய அமைச்சர்களுடனான எனது சந்திப்பின் புகைப்படங்களை வெளியிட்டுவிட்டார்கள். நான் அவர்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் மதிக்கப்படவில்லை. அந்த வாக்குறுதி மீறப்பட்டது. இது போன்ற சம்பவங்களால் அனைத்துக் கட்சித் தலைவர்கள் மீதான எனது நம்பிக்கையும் போய்விட்டது.'' என்றார்.

மத்திய அரசுடன் பேரம் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த வாங்சுக், ``பேரம் பேசுவதுதான் எனது நோக்கமாக இருந்திருந்தால், இதைவிடப் பெரிய பேரங்களைச் செய்திருக்க முடியும். என்னை மத்தியக் கல்வி அமைச்சராக்கச் சொல்லிக் கேட்டிருக்கலாம் அல்லது வேறு எதையாவது கோரியிருக்கலாம். பேரம் பேசுவதுதான் எனது நோக்கமாக இருந்தால், நான் 26 நாள்கள் உண்ணாவிரதம் இருந்திருக்க மாட்டேன்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.














