பாஜக: ``எனக்கும் கேசவ விநாயகத்துக்கும் என்ன கருத்துவேறுபாடு?" - அண்ணாமலை ஒப்பன் ...
`என் இதயம் நிறைந்திருக்கிறது!' - கர்ப்ப கால நினைவுகளைப் பகிர்ந்த ராம் சரணின் மனைவி உபாசனா!
தெலுங்குத் திரையுலகின் முன்னணி கதாநாயகன் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி தம்பதியினருக்கு சமீபத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஏற்கெனவே கிளின் காரா என்ற பெண் குழந்தை உள்ள நிலையில், மீண்டும் பெற்றோராகியுள்ள இந்தத் தம்பதிக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது கர்ப்ப கால பயணத்தை நினைவுகூர்ந்து உபாசனா சமூக வலைதளத்தில் உணர்ச்சிகரமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், மருத்துவர்கள் மற்றும் ஜோதிடர்கள் தனது கர்ப்பம் குறித்துத் தெரிவித்த கருத்துகளையும், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும் வரையிலான போராட்டங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ``இந்த வீடியோவைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் இதயம் நெகிழ்கிறது. எங்களைச் சுற்றியுள்ள அன்பு மற்றும் நேர்மறை எண்ணங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ராம் சரணின் ரசிகர்கள் எப்போதுமே எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். எங்களுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
குடும்பத்தில் மகிழ்ச்சி ஒருபுறம் இருக்க, ராம் சரண் தனது அடுத்த மெகா பட்ஜெட் படமான 'பெடி' (Pedhi) படத்திற்காகக் காத்திருக்கிறார். புச்சி பாபு சனா இயக்கும் இந்தப் படம், கிராமப்புற பின்னணியில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் திரைப்படம். நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படம், ஏப்ரல் மாதம் வெளியாகும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















