`டி.என்.பி.எஸ்.சி.யில் அரசியல் தலையீடா?' - முன்னாள் தலைவர் ஆர்.நடராஜ் என்ன சொல்க...
நரவானே புத்தக விவகாரம்: ``யார் பொய் சொல்கிறார்கள்?" - ராகுல் காந்தி கேள்வி!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இந்த நிலையில், முன்னாள் ராணுவத் தளபதி நரவானேவின் சுயசரிதை 'Four Stars of Destiny' நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புத்தகத்தை முன்வைத்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளும், அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. இதற்கிடையில், ராகுல் காந்தி, இன்னும் வெளியிடப்படாத 'Four Stars of Destiny' புத்தகத்தை நாடாளுமன்றத்துக்கு கொண்டுவந்தார்.
இந்த நிலையில், இந்தப் புத்தகத்தின் உரிமையை வைத்திருக்கும் பெங்குயின் பதிப்பகம், ``தற்போது புழக்கத்தில் உள்ள புத்தகத்தின் எந்தப் பதிப்பும் (அச்சு அல்லது டிஜிட்டல்) காப்புரிமை மீறலாகும். புத்தகத்தை நாங்கள் இன்னும் வெளியிடவில்லை. பொதுமக்களுக்கு விநியோகிக்கவும் இல்லை. சட்டவிரோதமாகப் புத்தகத் தகவல்களைப் பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்திருக்கிறது.
இது தொடர்பாக ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ``நரவானே 2023-ல் தனது எக்ஸ் பக்கத்தில், `எனது நூலைப் பாருங்கள், இணைப்பைப் பின்தொடருங்கள். மகிழ்ச்சியுடன் படியுங்கள். ஜெய் ஹிந்த்' எனப் பதிவிட்டிருக்கிறார். அப்படியானால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டுவிட்டது. அமேசான் தளத்திலும் விற்பனைக்கு இருப்பதைப் பார்த்தேன். முன்னாள் ராணுவத் தளபதி பொய் சொல்ல மாட்டார் என்று நான் நம்புகிறேன்.
நரவானேவின் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் இந்திய அரசிற்கும், பிரதமருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. எனவேதான் பெங்குயின் பதிப்பகம் அந்தப் புத்தகத்தை வெளியிட மறுக்கிறதோ எனத் தோன்றுகிறது. நரவானே உண்மையைப் பேசுகிறாரா அல்லது பெங்குயின் பதிப்பகம் உண்மையைப் பேசுகிறதா என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்றார்.

இதற்கிடையில், சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் புத்தகத்தின் அங்கீகரிக்கப்படாத நகல் பரப்பப்பட்ட விவகாரம் குறித்து டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. பதிப்பகத்தால் தயாரிக்கப்பட்ட புத்தகத்தின் பிடிஎஃப் (PDF) கோப்பு சில இணையதளங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அமேசான் போன்ற தளங்களில் புத்தகத்தின் அட்டைப்படம் விற்பனைக்கு இருப்பது போலக் காட்டப்பட்டதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.











