மத்திய அமைச்சரவையின் முதல் தமிழகப் பெண்! - காந்திகிராமம் தந்த மாபெரும் ஆளுமையின்...
"என் உடலை ஜூம் செய்து போட்டோ எடுத்து வலைதளத்தில் பகிர்ந்தனர்"- கேரள பெண் அமைச்சர் அதிர்ச்சித் தகவல்
கேரள மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் பிந்து கிருஷ்ணா டெல்லியில் நடைபெற்ற கேரள பத்திரிகையாளர் சங்கத்தின் 'மைக் டுகெதர்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அமைச்சர் பிந்து கிருஷ்ணா பேசுகையில், "கடந்த ஜூலை 6-ம் தேதி கொல்லத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற மேல்நிலைப் பள்ளி வகுப்புத் தொடக்க விழாவில் பங்கேற்றேன். அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஒரு ஆசிரியர், எனது உடலை மட்டும் தனது மொபைல் போனில் படம் பிடித்தார்.
இதைக் கவனித்த அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஒருவர், அந்த ஆசிரியரை எழுப்பி அங்கிருந்து அனுப்பினார். இருப்பினும், அவர் எடுத்த புகைப்படத்தைப் பின்னர் சமூக ஊடகங்களில் பதிவிட்டார். சிலர் அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்துப் பரப்பியதால் இது ஒரு பெரிய விவாதப் பொருளாக மாறியதைத் தொடர்ந்து அவர் அதை டெலிட் செய்தார்.
அமைச்சராக இருக்கும் என்னையே பொதுவெளியில் வைத்து இவ்வாறு புகைப்படம் எடுக்கத் துணியும் ஒருவர், அந்தப் பள்ளியில் படிக்கும் சிறு குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்வார். எனது முகத்தை வேறொருவரின் உடலுடன் சேர்த்து மார்பிங் செய்யப்பட்ட பல புகைப்படங்கள் ஏற்கனவே பரப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்து புகார் அளித்தும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் பலரது வாழ்க்கையை அவர்கள் சீரழிக்கின்றனர். இத்தகைய செயல்களால் ஆண்களும் அவமதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

சமூக வலைத்தளங்களில் பிரபலங்களின் தனியுரிமை மீறப்படுவது குறித்து உரிய பரிசோதனை நடத்தப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை முன்கூட்டியே தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
வன்முறைகள் மற்றும் அத்துமீறல்கள் அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை சார்பில் சிறப்பு வரைபடம் தயாரிக்கப்படும். மேலும், பெண்களின் பிரச்னைகளைக் கையாள்வதற்கான உள்ளூர் புகார் குழுக்களின் செயல்பாடுகள் குறைபாடற்ற முறையில் இருப்பதை அரசு உறுதி செய்யும்" என்றார்.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சருக்கே இந்த நிலையா என்ற ரீதியில் பிந்து கிருஷ்ணாவின் கருத்து விவாதப் பொருளானது.
இதுகுறித்து விளக்கமளித்து பேசிய அமைச்சர் பிந்து கிருஷ்ணா, "டெல்லியில் செய்தியாளர்கள் பெண்கள் மீதான சைபர் தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பியதால் நான் அந்தக் கருத்தைத் தெரிவித்தேன். சமூகத்தில் அனைவரும் அப்படி அல்ல. சிலரது தவறான மனநிலையையும், பெண்களிடம் அவர்களின் அணுகுமுறை, மோசமான நிலையில் பெண்களைச் சித்தரிக்கும் எண்ணம் ஆகியவை சரியல்ல என்பதைத் தெரிவிக்கவே, எனது அனுபவத்தைக் கூறினேன்.
அந்தப் புகைப்படத்தை அவர் டெலிட் செய்ததால் சட்டநடவடிக்கைகளுக்கு நான் செல்லவில்லை. பெண்களிடம் இதுபோன்ற தவறான அணுகுமுறை திருத்தப்படவேண்டும். பெண்கள் மீதான சைபர் தாக்குதலை அரசு தீவிரமாகப் பார்க்கிறது" என்றார்.















