கோவை தவெக-வில் உட்கட்சி மோதல்; சாலையில் மோதிக்கொண்ட இரு தரப்பினரால் பரபரப்பு!
கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் நேற்றிரவு கணியூர் பகுதியில், தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த பொதுமக்களுக்கு வாகனத்தில் சென்றபடி நன்றி தெரிவித்தார்.
அப்போது அங்கு திரண்ட த.வெ.க-வினர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு மாலை அணிவிக்க முயன்றனர். அக்கட்சியைச் சேர்ந்த வசந்தி என்ற நிர்வாகியை, த.வெ.க-வைச் சேர்ந்த மற்றொரு தரப்பு நிர்வாகிகளே மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் முன்னிலையிலேயே இருதரப்பினரும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் பேசிக் கொண்டு இருந்த போதே, த.வெ.க-வினர் இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சட்டமன்ற உறுப்பினர் அப்பகுதியில் இருந்து நகர்ந்து சென்றார்.
இதனைத்தொடர்ந்து இரு தரப்பைச் சேர்த்த த.வெ.க-வினரிடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், தன்னை த.வெ.க நிர்வாகிகள் தாக்கியதாக அக்கட்சியைச் சேர்ந்த வசந்தி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளார்.
இந்த மோதல் விவகாரம் குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.















