'மீண்டும் பழையபடி வணிக சிலிண்டர்கள் கிடைக்கும்' - கட்டுப்பாடுகளைத் தளர்த்திய மத்...
"என் மகன் அமைதியானவன்" - மும்பை ரயிலில் பயணிகள் முன்னிலையில் வாலிபர் குத்திக்கொலை; கதறிய தாய்
மும்பை புறநகர் ரயிலில் எப்போதும் கூட்டம் நிரப்பி வழியும். அதுவும் காலை மற்றும் மாலை நேரங்களில் புறநகர் ரயில்களில் ஏறி இறங்குவது என்பது நினைத்து பார்க்க முடியாத காரியம்.
குறிப்பாக மும்பையில் மேற்கு ரயில்வேயில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் வாசலில் பயணம் செய்யும் பயணிகள் மற்றவர்களை ஏறவோ அல்லது இறங்கவோ விடமாட்டார்கள். இவ்விவகாரத்தில் அடிக்கடி சண்டை நடப்பதுண்டு. அது போன்ற ஒரு சண்டையில் ரயிலுக்குள் வாலிபர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
மாயக் லோஹர் (21) என்ற வாலிபர் சர்ச்கேட்டில் இருந்து நாலாசோபாரா செல்லும் புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்தார்.
அவர் ரயிலின் வாசல் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது வெளியில் மழை பெய்து கொண்டிருந்தது. அந்நேரம் ரயில் கதவை மூடுவது தொடர்பாக மாயக்கிற்கும், சுவர்னா(30) என்ற பயணிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் சகபயணிகளும் சேர்ந்து கதவைத் திறந்து வைக்கும்படி கூறினர்.

அதோடு சுவர்ணாவை சில பயணிகள் அடிக்க முயன்றதாகத் தெரிகிறது. உடனே சுவர்ணா தனது பேக்கில் இருந்து பெரிய கத்தியை எடுத்து தன்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாயக்கைச் சரமாறியாகக் குத்தினார்.
அதனைத் தடுக்க அருகில் நின்ற பயணிகள் யாரும் முயற்சிக்கவில்லை. அவர் குத்தி முடித்துவிட்டு மற்ற பயணிகளைப் பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அடுத்த ரயில் நிலையத்தில் இருந்து இறங்கி கத்தியோடு சென்றுவிட்டார். மாயக் ரயிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்த காட்சி சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது.
சம்பவ இடத்திலேயே மாயக் பரிதாபமாக உயிரிழந்தார். ரயில்வே போலீஸார் மாயக் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளியைக் கைது செய்ய உடனே போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் கர்நாடகாவிற்குத் தப்பிச்செல்ல முயன்ற சுவர்ணா பன்வெல் ரயில் நிலையத்தில் பிடிபட்டார்.
கத்தி குறித்து விசாரித்தபோது ஆன்லைன் மூலம் நண்பர் ஒருவருக்காக வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். ஆனால் அந்தக் கத்தி இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர்.
போரிவலி ரயில்வே காவல் நிலையத்தின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தத்தா குப்ரேகர் இது குறித்து கூறுகையில், "கோரேகான் மற்றும் காந்திவலிக்கு இடையே, மழை பெய்து கொண்டிருந்தபோது ரயிலின் கதவை மூடுவது தொடர்பாக இரண்டு பயணிகள் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்," என்று தெரிவித்தார்.
இச்சம்பவத்தால் மாயக் குடும்பம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளது. மாயக் தாயார் கதறி அழுத படி அளித்த பேட்டியில், ''குற்றவாளியைத் தண்டியுங்கள். என் மகனுக்கு நீதி கிடைக்கட்டும். என் மகன் யாருடனும் சண்டையிட்டுக் கொள்ளமாட்டான்'' என்று தெரிவித்தார்.
மாயக் சகோதரி அளித்த பேட்டியில், ''எனது சகோதரனைக் குத்திக்கொன்ற நபருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் மற்ற பயணிகள் எங்கே போனார்கள். எனது சகோதரன் யாருடனும் சண்டையிட மாட்டான். அவன் மிகவும் அமைதியானவன்'' என்று தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்த பயணி ஒருவர் இது குறித்து கூறுகையில், ''இருவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, சக பயணிகள் லோஹருக்கு ஆதரவாக முன்வந்து சுவர்ணாவைத் தாக்கினர். பின்னர், அங்கிருந்தவர்கள் அந்த இருவரையும் பிரித்து, ரயில் பெட்டியின் வெவ்வேறு வெளியேறும் வழிகளை நோக்கி அனுப்பி வைத்தனர்.

இதனை அவமான உணர்ந்த சுவர்ணா, அதற்குக் காரணம் லோஹர்தான் என்று கருதி கோரேகான் மற்றும் மலாட் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது, சுவர்ணா தனது பையிலிருந்து ஒரு பெரிய கத்தியை எடுத்து லோஹரின் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் மூன்று அல்லது நான்கு முறை குத்தினார்.
இதில் லோஹர் சுயநினைவை இழந்து கீழே விழுந்தார். ரயில் போரிவலி நிலையத்தை நெருங்கியபோது, சுவர்ணா ரயிலிலிருந்து கீழே குதித்து இறங்கி தப்பி ஓடிவிட்டான்'' என்றார்.




















