`ஜெயலலிதா டு விஜயகாந்த்' - தமிழக அரசியலில் சினிமா பிரபலங்களைத் தோற்கடித்த வேட்பா...
`என் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் கல்லுப்பட்டி ஆலமர மேடை' - நெகிழ்ந்த தங்கம் தென்னரசு
``என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான்" - தந்தை தங்கப்பாண்டியன் பிரசாரத்தைத் தொடங்கிய ஆலமர மேடையில் தனயன் தங்கம் தென்னரசு உணர்ச்சி பூர்வமான பிரசாரம்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எஸ்.கல்லுப்பட்டியில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு இன்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். தனது தந்தை தங்கப்பாண்டியன் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கும் பாரம்பரிய இடமான ஆலமர மேடையிலேயே அவர் பிரசாரத்தைத் மேற்கொண்டார்.

இந்த பிரசார கூட்டத்தில் பேசிய தங்கம் தென்னரசு, ``எத்தனையோ பறவைகளுக்கு இருப்பிடமாகவும், கிராம மக்களுக்கு நிழலிடமாகவும் இருக்கும் இந்த ஆலமரம் எனக்கும் எப்போதும் ஒரு புகலிடமாகவே இருந்து வருகிறது. இந்த மேடை எனக்குப் புதிதல்ல. எத்தனையோ முறை இங்கு நின்று உங்களுடன் பேசியிருக்கிறேன், உரையாடியிருக்கிறேன். எஸ். கல்லுப்பட்டிக்கு நான் வெளியூர்க்காரனல்ல, இந்த ஊர்க்காரனாகவே என்னை நீங்கள் எப்போதும் பார்க்கிறீர்கள்.
என் அரசியல் பயணத்தில் இந்தியா முழுவதும், வெளிநாடுகள் வரை சென்று உரையாற்றியிருந்தாலும், என் மனதில் என்றும் நீங்காத இடத்தைப் பிடித்திருக்கும் மேடை இந்தக் கல்லுப்பட்டி ஆலமர மேடைதான். ஏனெனில் இது என் தந்தை மிகவும் நேசித்த இடமாகும்.
நான் நிதி அமைச்சராகவோ, பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவோ சட்டமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தாலும், உங்களின் அழைப்புக்கு எப்போதும் ஓடிவரும் உங்கள் வீட்டுப் பிள்ளையாகவே நான் இருக்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது எஸ். கல்லுப்பட்டியில் என்னால் முடிந்த அளவுக்கு பல திட்டங்களைச் செய்துள்ளேன். நான் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது உருவாக்கப்பட்ட இந்தப் பள்ளி இன்று காரியாபட்டி சுற்றுவட்டாரத்திலேயே சிறந்த பள்ளியாகத் திகழ்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் கிராமங்களில் கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது.

கலையரங்கங்கள், சமுதாயக் கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள் என பல்வேறு அரசு வசதிகள் கொண்ட கிராமமாக கல்லுப்பட்டி உள்ளது. கட்சி பாகுபாடின்றி, இது நம் கிராமம் என்ற முறையில் நான் எப்போதும் பணியாற்றி வந்துள்ளேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, மீண்டும் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக அமர்த்துங்கள். மகளிர் மேம்பாட்டுக்காக அவர் அறிவித்துள்ள பல்வேறு திட்டங்கள் உங்களைச் சென்றடைய வழிவகை செய்யுங்கள்" என்று தெரிவித்தார்.





















