`ஆண்டுக்கு ரூ.200 கோடி வாடகை மிச்சமாகும்' - ரூ.1600 கோடியில் ஏர் இந்தியா கட்டடத்...
ஏன் USB-ஐ ஒருபக்கம் மட்டும் செருக முடிகிறது? சுவாரஸ்ய பின்னணி - இது தெரியாமப் போச்சே?! - 26
USB பென் டிரைவை (குறிப்பாக Type-A) கணினியில் செருக முற்படும்போது, பலருக்கும் ஏற்படும் ஒரு பொதுவான அனுபவம், அதை ஒரே பக்கமாக மட்டுமே செருக முடியும் என்பதுதான்.
"எப்படியும் குறைந்தது மூன்று முறை மாற்றி மாற்றிப் போட்டுப் பார்த்தால்தான் அது சரியாக நுழையும்" என்பது இணையத்தில் பலராலும் பகிரப்படும் ஒரு உலகளாவிய நகைச்சுவை.
இது ஒரு வடிவமைப்புப் பிழை போலத் தோன்றினாலும், இதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான தொழில்நுட்ப மற்றும் பொருளாதாரக் காரணம் உள்ளது.

1990-களின் மத்தியில் இன்டெல் நிறுவனத்தில் பணிபுரிந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பட் தலைமையிலான குழுதான் USB-ஐ (Universal Serial Bus) உருவாக்கியது.
USB-ஐ இருபுறமும் செருகும் வகையில் (Reversible) வடிவமைக்க வேண்டும் என்றால், அதனுள் இருக்கும் வயர்கள், உலோக ஊசிகளின் எண்ணிக்கையை இருமடங்காக்க வேண்டும். மேலும், எந்தப் பக்கம் செருகப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய கூடுதல் மின்சுற்றுகள் தேவைப்படும். இது ஒட்டுமொத்த தயாரிப்புச் செலவை இரண்டு மடங்காக ஆக்கியிருக்கும்.
அந்தக் காலகட்டத்தில் புதிய தொழில்நுட்பத்தை ஆப்பிள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதன் உதிரிபாகங்கள் மிக மலிவாக இருக்க வேண்டும். எனவே, செலவைக் குறைப்பதற்காகவே ஒரு பக்கம் மட்டும் இணையும்படி வடிவமைத்தார்கள்.
தவறான துருவங்களில் மின்சாரம் பாய்ந்து சாதனங்கள் ஷார்ட் சர்க்யூட் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே, அதன் ஒரு பாதியை பிளாஸ்டிக் மூலம் அடைத்து, சரியான திசையில் மட்டுமே நுழையும்படி ஒரு முட்டுக்கட்டையை (Physical block) உருவாக்கினர்.

கண்டுபிடிப்பின் தொடக்கம்
அஜய் பட்டின் மனைவி ஒருமுறை கணினியில் பிரிண்டரை இணைக்க முடியாமல் திணறியதைக் கண்டபோதுதான் அவருக்கு இந்த யோசனை வந்தது. அக்காலத்தில் ஒவ்வொரு சாதனத்திற்கும் வெவ்வேறு விதமான போர்ட்டுகள் (Serial, Parallel ports) இருந்தன. அனைத்திற்கும் ஒரே தீர்வாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இது உருவாக்கப்பட்டது.
இன்டெல் நிறுவனம், இந்த மாபெரும் தொழில்நுட்பத்திற்கு காப்புரிமை கட்டணம் எதையும் வசூலிக்கவில்லை. உலகமே இதை இலவசமாகப் பயன்படுத்த திறந்தவெளி தரநிலையாக (Open Standard) மாற்றிவிட்டனர். இந்தக் கண்டுபிடிப்புக்காக அஜய் பட் தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கவில்லை என்பது பலரும் அறியாத உண்மை.

பல வருடங்களுக்குப் பிறகு, தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து தயாரிப்புச் செலவு குறைந்த பின்னரே, இருபுறமும் செருகக்கூடிய USB Type-C அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே, அந்தப் பழைய ஒரு பக்க வடிவமைப்பு என்பது ஒரு குறைபாடு அல்ல; அது ஆரம்பகால கணினி உலகில் USB-ஐ அனைவருக்கும் மலிவாகக் கொண்டு சேர்ப்பதற்காகச் செய்யப்பட்ட ஒரு புத்திசாலித்தனமான சமரசம்!



















