இளையராஜா: கோடிக்கணக்கான மக்களின் இதயத் துடிப்போடு கலந்த இசைஞானி!
Nvidia-வின் 'AI PC' : ஒற்றை சிப் தான்! `உங்க லேப்டாப்பே பேசும், யோசிக்கும்' - வேறமாதிரி டெக்னாலஜி!
கம்ப்யூட்டர் உலகில் ஒரு புதிய புரட்சிக்குத் தயாராகுங்கள்! இதுவரை நாம் பயன்படுத்திய லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களின் வரலாற்றையே மாற்றி எழுதும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை Nvidia நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மைக்ரோசாப்ட், டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு (AI) திறன்களுடன் கூடிய 'AI PC'-க்களை சந்தைக்குக் கொண்டுவரவிருக்கிறது Nvidia.
தைபேயில் நடைபெற்ற Nvidia GTC மாநாட்டில், நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் இந்த அறிவிப்பை வெளியிட்டார். "இது பெர்சனல் கம்ப்யூட்டரை (PC) முற்றிலுமாக மாற்றி அமைக்கப் போகிறது," என்று அவர் நம்பிக்கையுடன் கூறினார்.
சுமார் மூன்று ஆண்டுகளாக மைக்ரோசாப்ட் மற்றும் Nvidia இடையே நடந்து வந்த கூட்டு முயற்சியின் விளைவாக இந்த புதிய தொழில்நுட்பம் உருவாகியுள்ளது. இதன் மூலம், இன்டெல், ஏஎம்டி மற்றும் ஆப்பிள் போன்ற ஜாம்பவான்களுக்கு Nvidia நேரடிப் போட்டியை உருவாக்கியுள்ளது.

அப்படி என்ன இதில் ஸ்பெஷல்?
'RTX Spark' என்ற பெயரில் ஒரு புதிய சூப்பர்சிப்பை Nvidia அறிமுகப்படுத்தியுள்ளது. இது CPU (Central Processing Unit) மற்றும் GPU (Graphics Processing Unit) ஆகிய இரண்டின் சக்தியையும் ஒருங்கே இணைத்த ஒரு சக்திவாய்ந்த சிப் ஆகும். இந்த சிப்தான் இனி வரவிருக்கும் புதிய விண்டோஸ் லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப்களுக்கு இதயமாக இருக்கப்போகிறது. "இது கடந்த 40 ஆண்டுகளில் PC துறையில் நடக்கும் முதல் மிகப்பெரிய மாற்றம்" என்கிறார் ஹுவாங்.

சரி, இந்த 'AI PC' என்னவெல்லாம் செய்யும்?
ஜென்சன் ஹுவாங் , "இதில் ஒரு சுய சிந்தனை கொண்ட AI ஏஜென்ட் இருக்கும். அது உங்களின் உதவியாளர் போல செயல்படும். அது உங்களைப் புரிந்துகொள்ளும், நீங்கள் அதனிடம் பேசலாம். உங்களுக்காக ஃபைல்களைப் படிக்கச் சொல்லலாம், சில ஆராய்ச்சிகளைச் செய்ய உதவச் சொல்லலாம். இது இன்னும் பலவற்றைச் செய்யும்." அதாவது, உங்கள் கம்ப்யூட்டர் இனி ஒரு கருவி மட்டுமல்ல, உங்களுடன் உரையாடும், உங்களுக்காக சிந்திக்கும் ஒரு புத்திசாலி நண்பனாக மாறப்போகிறது. இந்த கம்ப்யூட்டர்கள் சிக்கலான AI மாடல்களை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே, நேரடியாக லோக்கலாக இயக்கும் திறன் கொண்டவை என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்பப் புரட்சியில் டெல், ஹெச்பி, லெனோவா, ஏசஸ், மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ், எம்எஸ்ஐ போன்ற முன்னணி பிராண்டுகள் கைகோத்துள்ளன. விரைவில் ஏசர் மற்றும் ஜிகாபைட் நிறுவனங்களும் இந்த பட்டியலில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப சந்தை ஆய்வு நிறுவனமான கவுன்டர்பாயிண்ட் ரிசர்ச்-ன் இணை நிறுவனர் நீல் ஷா, "அடுத்த 10 ஆண்டுகளில் PC-க்கள் எப்படி இருக்கும் என்பதை இந்த அறிவிப்பு புரட்சிகரமாக மாற்றியுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு 'AI சூப்பர் கம்ப்யூட்டர்' இருக்கும் நிலையை இது உருவாக்கும்" என்று கூறியுள்ளார்.
எல்லாம் சரிதான், ஆனால் இதில் சில சிக்கல்களும் இருக்கின்றனவே? இந்த AI PC-க்களுக்கு சந்தையில் கலவையான வரவேற்பே கிடைத்துள்ளது. ஹெச்பி நிறுவனம் இதன் மூலம் தங்களது காலாண்டு விற்பனை அதிகரித்ததாகக் கூறினாலும், டெல் நிறுவனம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லை என்று கூறியுள்ளது. முக்கியமாக, மைக்ரோசாப்ட் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், பிரைவசி குறித்த கவலைகளும் எழுந்துள்ளன. இதற்கு முன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்திய 'Cortana' என்ற டிஜிட்டல் அசிஸ்டென்ட், பயனர்களின் உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக எழுந்த புகார்களால் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.

ஆனால், இந்த முறை பிரைவசி பிரச்சனைக்கு ஒரு தீர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த AI ஏஜென்ட்கள் கிளவுடில் இயங்காமல், நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரிலேயே (locally) இயங்கும். இதனால், உங்கள் தகவல்கள் உங்கள் சாதனத்தை விட்டு வெளியே செல்ல வாய்ப்பில்லை.
இது குறித்து கிரேஸ் பீக் கேபிடல் நிறுவனர் ஸ்காட் ஸ்டீவன்ஸ் கூறுகையில், "Cortana போல உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் அணுகும் வசதியை அளிக்காமல், குறிப்பிட்ட பணிகளுக்கு மட்டும் AI-ஐ பயன்படுத்த அனுமதிப்பது பாதுகாப்பானது. இந்த புதிய அணுகுமுறை பயனர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்," என்றார்.
இந்த அறிவிப்பு பங்குச்சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. Nvidia, மைக்ரோசாப்ட், டெல் நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்த நிலையில், அதன் போட்டியாளர்களான ஏஎம்டி மற்றும் இன்டெல் நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. AI PC-க்கள் மட்டுமின்றி, டேட்டா சென்டர்களுக்கான CPU-க்கள் மற்றும் மனிதர்களைப் போன்ற 'Isaac GR00T' என்ற ஹியூமனாய்டு ரோபோவின் மாதிரி வடிவமைப்பையும் Nvidia இந்த மாநாட்டில் அறிமுகம் செய்து, தொழில்நுட்ப உலகில் தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.





















