இளையராஜா: கோடிக்கணக்கான மக்களின் இதயத் துடிப்போடு கலந்த இசைஞானி!
"'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும்; ஆனால்..."- மாரி செல்வராஜ் கொடுத்த அப்டேட் என்ன?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பைசன் காளமாடன்'.
தீபாவளிக்கு வெளியான இந்தத் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 'பைசன் காளமாடன்' திரைப்படத்திற்குப் பிறகு தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
'பைசன் காளமாடன்' படத்தின் ப்ரோமோஷன் வேளையிலும், அடுத்ததாக தனுஷ் படத்தை இயக்குவதாக மாரி செல்வராஜும் உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், மாரி செல்வராஜின் 6-வது திரைப்படம் பற்றிய அறிவிப்பு நேற்று (மே.1) வெளியானது. படத்திற்கு 'மஞ்சணத்தி' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று 83-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இளையராஜாவுக்கு மாரிசெல்வராஜ் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய மாரி செல்வராஜ், "இளையராஜாவின் 83-வது வயதில் அவருடன் இணைந்து என்னுடைய 6-வது படத்தை இயக்குகிறேன். வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான தருணம் என்று நினைக்கிறேன்.
ராஜா சாருடன் பணியாற்ற வேண்டும் என்பது ஒரு ஏக்கமாகவே இருந்தது. அவர் என்னுடைய சினிமா வேலைகள் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறார். என்னுடன் அவர் பழகும் விதமும், பிள்ளையாக நினைக்கின்ற விதமும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது.

நிச்சயமாக நான் அவருக்குக் கொடுக்கும் அன்பாக இந்த 'மஞ்சணத்தி' இருக்கும். மஞ்சணத்தி படத்தை எழுதும்போதே இளையராஜாவை மனதில் வைத்துக் கொண்டுதான் எழுதினேன்.
மனதிலும், புத்தியிலும் இசையை வைத்துக் கொண்டே எழுதிய படம்தான் 'மஞ்சணத்தி'. இளையராஜா மீது எனக்கு தீராக் காதல், அதை வெளிப்படுத்தும் விதமாகவே அவரைப் பார்க்கும்போதெல்லாம் முத்தம் கொடுக்கிறேன். 'வாழை' படத்தின் ஒரு பகுதியாக 'மஞ்சணத்தி' இருக்கும். ஆனால் அதன் இரண்டாம் பாகமாக 'மஞ்சணத்தி' இருக்காது'' என்று கூறியிருக்கிறார்.



















