NRI Corner 2: Real Estate, Gold, Mutual Fund - NRI தமிழர்கள் எதில் முதலீடு செய்த...
குஜராத் உள்ளாட்சி தேர்தல்: சோஷியல் மீடியாவுக்கு முக்கியத்துவம்; வேட்பாளர் தேர்வில் பாஜக பிளான் என்ன?
குஜராத் மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்கு வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் சோசியல் மீடியா முக்கியமான இடத்தை பிடித்து இருக்கிறது. வேட்பாளர் தேர்வு மற்றும் பிரசாரத்திற்கு இந்த சோசியல் மீடியாவை அதிக அளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க தரப்பில் அதிகமானோர் விருப்பம் தெரிவித்து மனுக்கொடுத்துள்ளனர். அதுவும் சூரத் மற்றும் வதோதரா மாநகராட்சியில் ஒரு வார்டுக்கு 100 பேர் வரை விருப்ப மனு கொடுத்து இருக்கின்றனர். இதனால் வேட்பாளர்களை தேர்வு செய்ய பா.ஜ.க புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது. செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில்நுட்ப சாஃப்ட்வேர்களைக் கொண்டு வேட்பாளர்களை தேர்வு ஆரம்பித்துள்ளனர்.
அதோடு தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் அவர்களின் சோசியல் மீடியா கணக்கு, அதில் இருக்கும் ஃபாலோவர்கள் எண்ணிக்கை, எத்தனை ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர், டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எந்த அளவுக்கு திறமை இருக்கிறது என்பது போன்ற விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதமே தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு சோசியல் மீடியாவில் எத்தனை ஃபாலோவர்கள் இருக்கின்றனர் என்ற விவரம் கேட்கப்படும் என்ற தகவல் வெளியானதால், அனைவரும் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே அதிக அளவில் சோசியல் மீடியாவில் ரீல்ஸ் போட ஆரம்பித்தனர். மேலும் ஃபாலோவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஆரம்பித்தனர்
கட்சியில் விருப்ப மனு கொடுக்க கட்சித் தொண்டர்கள் தங்களது சோசியல் மீடியா கணக்கு விவரங்கள் அடங்கிய தகவல்களையும் கையோடு கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றனர். தேர்தலில் போட்டியிட அதிக அளவில் மனுக்கள் வந்து இருப்பதால், அவற்றை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர் ஒன்றையும் பா.ஜ.க அறிமுகம் செய்து இருக்கிறது.
வதோதராவில் மூன்று வார்டுகளில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ள ஒருவர் இது குறித்து கூறுகையில், ''டிஜிட்டல் யுகத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொண்டதை நிரூபிக்க, சோசியல் மீடியா புள்ளிவிவரங்கள் அடங்கிய பெரிய கோப்புகளை கட்சி கேட்டுள்ளது. பாரம்பர்யமான வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பதை விட, டிஜிட்டல் தளங்கள் மூலமான பிரசாரம் மிக அதிக அளவிலான மக்களைச் சென்றடைவதாகக் கட்சித் தலைவர்கள் கருதுகின்றனர்'' என்றார்.
வதோதராவில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்துள்ள வழக்கறிஞர் ஹர்ஷத் பார்மர், தனது சோசியல் மீடியா விவரங்கள் குறித்து 45 பக்கத்திற்கு கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ''தென்னிந்தியாவின் சில மாநிலங்களில் சோசியல் மீடியா விவரங்கள், ஏ.ஐ. தொழில் நுட்பம் போன்றவை வேட்பாளர்களை தேர்வு செய்ய சோதனை அடிப்படையில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் குஜராத்தில்தான் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ கோபாலுக்கு எதிராக, பார்மர் வெளியிட்ட ரீல்ஸ் ஒன்றை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். அதோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் குறித்து வெளியிட்ட ஒரு ரீல்ஸ், 5 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. சோசியல் மீடியா விவரங்கள் கேட்பது குறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர், ''வேட்பாளர்களுக்கு சீட்டுகளை வழங்குவது குறித்த இறுதி முடிவு கட்சியின் உயர்மட்டத் தலைவர்களிடமும் மாநிலச் செயற்குழுவிடமும் தான் இருக்கும். குறிப்பிட்ட சில வார்டுகளில், வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்காதவர்களைக்கூட வேட்பாளர்களாக நிறுத்தும் அதிகாரம் கட்சிக்கு இருக்கிறது'' என்று தெரிவித்தார். பா.ஜ.க-வின் இந்த புதிய நடைமுறையால் சோசியல் மீடியா கணக்கு இல்லாதவர்கள்கூட புதிய கணக்கைத் தொடங்கி ரீல்ஸ்களை அதிக அளவில் வெளியிட்டு வருகின்றனர்.













.jpg)