கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மே...
'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?
தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், 'நாம் கூட்டணிக்கு போகலாமா? உங்களுடைய விருப்பம் என்ன?' என நிர்வாகிகள் மத்தியில் கேட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி தவெகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் உள்ளரங்கக் கூட்டத்தில் உறுதி செய்திருந்தார். இந்நிலையில், தவெக தனித்து போட்டியிட தயாராகிறது எனும் தோற்றம் உண்டாகியது. ஆனால், திடீரென தவெக தரப்பில் ஒரு ட்விஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
அவசர கூட்டம்...!
இன்று மதியம் 12 மணியளவில் மாவட்டச் செயலாளர்களின் வாட்ஸ் அப் குழுவில் மீட்டிங் லிங்கை பதிவிட்டு, 'மதியம் 12:30 மணிக்கு அவசர ஆலோசனைக் கூட்டம் இருக்கிறது. அத்தனை மா.செக்களும் தவறாமல் இணையுங்கள்' என ஒரு செய்தியை ஆனந்த் அனுப்பியிருக்கிறார். 12:45 மணியளவில் கூட்டம் தொடங்கியிருக்கிறது.

20 நிமிடங்களுக்கு மட்டுமே கூட்டம் நடந்திருக்கிறது. அதில்தான் பொதுச்செயலாளர் ஆனந்த் சர்ப்ரைஸாக, 'நாம் கூட்டணிக்கு செல்லலாமா? உங்களின் கருத்து என்ன? குறிப்பாக, திமுகவை வீழ்த்த நமக்கு கூட்டணி தேவையா இல்லையா?' எனக் கேட்டிருக்கிறார். திடீரென கூட்டப்பட்ட கூட்டம் என்பதால் சில மா.செக்கள் ஆப்செண்ட். கூட்டத்தில் இருந்தவர்கள் தங்களின் கருத்துகளை கூறியிருக்கின்றனர்.
கணிசமானோர் நாம் கூட்டணிக்கு சென்றால்தான் திமுகவை வீழ்த்த முடியும் எனக் கூறியிருக்கின்றனர். பதிலுக்கு ஆனந்த், 'அப்படி கூட்டணி சென்றால் பலருக்கும் சீட் கிடைக்காதே?' எனக் கேட்டிருக்கிறார். 'கட்சியின் நலன் தான் எங்களுக்கு முக்கியம். தளபதி வெல்ல வேண்டும். அவ்வளவுதான்...' என பாசிட்டிவாக மா.செக்கள் பதில் கூறியிருக்கின்றனர். மேலும், '50-60 சீட்டுகள் + தளபதிக்கு துணை முதல்வர் பதவி என்றால் சிறப்பாக இருக்கும்' என்றும் சில மா.செக்கள் கூறியிருக்கின்றனர்.

கூட்டணிக்கு க்ரீன் சிக்னல் கிடைத்த உற்சாகத்தில் கடைசியாக பேசிய ஆனந்த், 'கூட்டணி குறித்த உங்களின் கருத்துகளை தலைவரிடம் எடுத்துச் செல்கிறேன். நீங்கள் எப்போதும் போல தொய்வில்லாமல் உங்களின் வேலையை செய்து கொண்டிருங்கள்!' எனக் கூறி முடித்திருக்கிறார்.
சில மா.செக்கள், 'முதல் தேர்தலில் நம் பலத்தை நிரூபித்தால், அடுத்தடுத்த தேர்தலில் நம்மை நோக்கி கட்சிகள் வரும். அதனால் தனித்தே போட்டியிடலாம்' என்றும் கூறியிருக்கின்றனர்.
'கூட்டணின்னா எந்த கட்சி கூட்டணிண்ணா? என சில மா.செக்களிடம் கேட்டோம். 'வேற என்னங்க ஆப்சன் இருக்கு. உங்களுக்கும் தெரியும். எங்களுக்கு தலைவர் ஜெயிச்சா போதும்!' என குஷியாக பேசுகின்றனர் சில மா.செக்கள்!


















