Iran: "கத்தார், சவுதி, அமீரகம் கேட்டுகொண்டதால் தற்காலிக போர் நிறுத்தம்; ஆனால்......
கெளதம் அதானி மீதான குற்ற வழக்குகள்; கைவிட்ட அமெரிக்க அரசு; தள்ளுபடி செய்த நீதிமன்றம்; காரணம் என்ன?
தொழிலதிபர் கெளதம் அதானி இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்க முதலீட்டாளர்களிடம் நிதி திரட்டியதாக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் அதானி மீதும், அவரது உறவினர் சாகர் அதானி மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுத்தது.
இது தொடர்பான வழக்கு நியூயார்க் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அதானி மற்றும் அவரது உறவினர் மீதான வழக்குகளை அமெரிக்கா கைவிட இருப்பதாக செய்தி வெளியானது.
இவ்வழக்கு விசாரணையின்போது தன் மீதான வழக்குகளைக் கைவிட அதானி 6 மில்லியன் டாலரும், அவரது உறவினர் சாகர் அதானி 12 மில்லியன் டாலரும் கொடுக்கத் தயாராக இருப்பதாக கோர்ட்டில் தெரிவித்தனர்.

அதனை கோர்ட் ஏற்றுக்கொண்டது. அவர்கள் தங்கள் மீதான புகாரை மறுக்கவும் இல்லை. ஒப்புக்கொள்ளவும் இல்லை. அவர்களின் கோரிக்கையை ஏற்று அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் இரண்டு பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களையும் கைவிடுவதாக கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இது தவிர ஈரானில் இருந்து தடையை மீறி எல்.பி.ஜி வாங்கியது தொடர்பான குற்றச்சாட்டுக்களையும் அமெரிக்க கருவூலத்துறை கைவிட்டுள்ளது. இதற்காக 275 மில்லியன் டாலர் கொடுக்க அதானி ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க நீதித்துறை இது தொடர்பாக கோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளது.
அதில் அதானி மற்றும் சாகர் அதானிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களைத் தள்ளுபடி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதானி மீதான குற்றச்சாட்டுக்களை ஆய்வு செய்ததாகவும், இனிமேல் இதற்காக மேற்கொண்டு செலவிடப்போவதில்லை என்றும் நீதித்துறை கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் இருவர் மீதான புகார்களைத் தள்ளுபடி செய்தது. அதானி குழுமத்தின் உலகளாவிய விரிவாக்கத் திட்டங்களுக்குப் பெரும் இடையூறை ஏற்படுத்தக்கூடிய சூழல் இருந்ததால் அதானி இவ்வழக்கை மேற்கொண்டு இழுத்தடிக்காமல் முடித்துக்கொண்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்கக் குற்றவியல் நடவடிக்கைகளில் இத்தகைய வழக்குத் தள்ளுபடிகள் அரிதானவை. விரிவான விசாரணைக்குப் பிறகு, இவ்வழக்கை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வது இனி அவசியமில்லை என்ற முடிவுக்கு கோர்ட் வந்துள்ளதையே இது காட்டுகிறது.
குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்தப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கண்டறிந்ததை அடுத்து, இந்த வழக்கு அதானிக்குச் சாதகமாகத் திரும்பியது என இவ்விவகாரம் குறித்து அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர்களுக்கும், அதானி தரப்பு சட்டக் குழுவிற்கும் இடையே மாதக்கணக்கில் நடைபெற்ற தீவிரமான விசாரணைக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க சட்ட ஆலோசகர்கள் விசாரணையின் போது தொடர்ச்சியாக ஆவணங்களையும், விளக்கக் காட்சிகளையும் கோர்ட்டில் அளித்தனர். கௌதம் மற்றும் சாகர் அதானி ஆகியோருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க எவ்விதக் ஆதாரங்களையும் அமெரிக்க சட்டவல்லுனர்களால் வெளிக்கொண்டு வர முடியவில்லை. இதன் விளைவாக, அமெரிக்க நீதித்துறை வழக்கை ரத்து செய்ய முடிவு செய்தது.



















