`திமுக-வினரை சந்திக்கக் கூடாது’ காங்கிரஸ் தடை டு `சீட்டே வேண்டாம்' - `பூ’ நடிகை ...
கேரளா: பினராயி விஜயனை பாஜக கூட்டணிக்கு அழைத்த மத்திய அமைச்சர்; CPM-ன் பதில் என்ன தெரியுமா?
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை அமைச்சராக ராம்தாஸ் அத்வாலே உள்ளார். இவர் தலைவராக உள்ள ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ளது.
ரீபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாநில மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று கேரள மாநிலம் கண்ணூருக்குச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "கேரளாவில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பினராயி விஜயன் பா.ஜ.க கூட்டணியில் இணைய வேண்டும். கேரளாவில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியுடன் சேர்ந்து நின்றால் பினராயி விஜயன் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.
கேரளாவின் வளர்ச்சிக்காகத் தாராளமாக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெறலாம். விவசாயம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையில் பெரிய பாய்ச்சலை கேரளா அடைய முடியும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதால் நீங்கள் பா.ஜ.க-வாக ஆகிவிடமாட்டீர்கள். பல கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைகின்றன. கம்யூனிஸ்ட் கட்சி, பா.ஜ.க-வை எதிர்க்கலாம், ஆனால் வளர்ச்சியை எதிர்க்கக் கூடாது.
கொள்கை ரீதியாக பா.ஜ.க-வுக்கும், சி.பி.எம் கட்சிக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக கருத்து இருந்தாலும், வளர்ச்சி என்ற முறையில் இந்தப் பாகுபாடு தேவை இல்லை. என்.டி.ஏ-வின் கூட்டணிக் கட்சியாக இடதுசாரிகளை வரவேற்கிறோம்.

நம் நாட்டில் மட்டும் அல்ல, உலக நாடுகளில் 70 சதவிகிதம் மக்கள் ஆதரவைப் பெற்றவர் பிரதமர் மோடி. குறைந்தபட்ச திட்டத்தின் ஒருபகுதியாக நாட்டின் வளர்ச்சிக்காக சி.பி.எம் தலைமையிலான கேரளத்தின் எல்.டி.எஃப் கூட்டணி என்.டி.ஏ கூட்டணியில் அங்கமாக வேண்டும்" என்றார்.
மத்திய அமைச்சரின் கூட்டணி அழைப்பு குறித்து கருத்து தெரிவித்த கேரள மாநில சி.பி.எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன், "கேரள அரசியலைப் பற்றி மத்திய அமைச்சருக்குப் போதுமான புரிதல் இல்லை. கேரள இடதுசாரி இயக்கம் ஒவ்வொரு கட்டத்திலும் போராடித்தான் வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக முன்னேறி உள்ளது" என்றார்.











