'தடை விதிக்கப்படும்!'- பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் ஆடும் வீரர்களுக்க...
சர்க்கரை நோய் சிகிச்சை: 'MVCON 2026' மாநாட்டில் டாக்டர் ஏ.வி.அனூப்பிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
சென்னையில் சர்க்கரை நோய் மற்றும் பாத பராமரிப்பு குறித்த உலகத்தரம் வாய்ந்த விவாதங்களுடன் 'எம்.வி.கான் 2026' (MVCON 2026) அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில், ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவத்தை ஒருங்கிணைத்து ஆரோக்கிய சேவையில் முத்திரை பதித்து வரும் ஏ.வி.ஏ (AVA) குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஏ.வி. அனூப் அவர்களுக்கு, மதிப்புமிக்க 'எம்.வி.கான் வாழ்நாள் சாதனையாளர் விருது 2026' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சி.எஃப்.டி.ஐ (CFTI) சென்னை பிரிவின் இயக்குனர் திரு. முரளி கே. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த விருதினை வழங்கினார்.

டாக்டர் ஏ.வி. அனூப்பின் நெகிழ்ச்சியான ஏற்புரை:
விருதினைப் பெற்றுக்கொண்டு டாக்டர் ஏ.வி. அனூப் பேசியதாவது
"கடந்த மாதம் டாக்டர் விஜய் விஸ்வநாதன் என்னை அழைத்து, இந்த நீரிழிவு மாநாட்டில் எனக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்படுவதாகக் கூறியபோது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
முதலில் எனக்குத் தயக்கம் இருந்தது, ஏனெனில் இது நீரிழிவு தொடர்பான மாநாடு. ஆனால், ஆயுர்வேதம் உட்பட பல்வேறு துறைகளில் எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

எம்வி டயாபெட்டிக்ஸ் (MV Diabetes) உடனான எனது தொடர்பு பல தசாப்தங்களுக்கு முன்னரே தொடங்கியது. எனது சித்தப்பா 1954-ல் இந்த கிளினிக் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே டாக்டர் விஸ்வநாதனிடம் சிகிச்சை பெற்று வந்தவர். சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இங்கே சிகிச்சை பெற்றார். அதனால் இந்த நிறுவனத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

ஆயுர்வேதம் மற்றும் நவீன மருத்துவம் (Allopathy) ஆகியவற்றை எதிரெதிராகப் பார்க்காமல், அவற்றை ஒருங்கிணைத்துப் பார்ப்பதே சிறந்தது என்று நான் கருதுகிறேன்.
ஆயுர்வேதம் ஒரு முழுமையான, தடுப்பு முறை சார்ந்த சிகிச்சையை வழங்குகிறது; நவீன மருத்துவம் அவசர கால சிகிச்சையில் சிறந்து விளங்குகிறது. இவை இரண்டும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன.
குறிப்பாக, நீரிழிவு புண் மேலாண்மை (Diabetic wound management) மற்றும் நரம்பு வலி ஆகியவற்றுக்கான தயாரிப்புகளை உருவாக்க டாக்டர் விஜய் விஸ்வநாதன் மற்றும் எம்வி டயாபெட்டிக்ஸ் குழுவினருடன் இணைந்து பணியாற்றியுள்ளோம்.

இதன் மருத்துவ பரிசோதனை முடிவுகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மெடிமிக்ஸ் சோப்பின் உருவாக்கமும் கூட ஒரு ஒருங்கிணைந்த சிந்தனைதான் எனது தந்தை டாக்டர் வி.பி. சித்ரன், ஒரு அலோபதி மருத்துவராக இருந்தபோதே, நோயாளிகளின் தோல் நோய்களுக்காக ஆயுர்வேத மூலிகைகளைப் பயன்படுத்தி இந்த சோப்பை உருவாக்கினார். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காகப் பல்வேறு மருத்துவ முறைகளை ஒருங்கிணைப்பதே சிறந்தது என்பதே எனது செய்தி" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
முன்னோடி ஆராய்ச்சியாளர்களின் பங்களிப்பு:
விழாவில் உரையாற்றிய எம்வி டயாபெட்டிக்ஸ் தலைமை மருத்துவர் டாக்டர் விஜய் விஸ்வநாதன், சர்க்கரை நோய் சிகிச்சையில் ஒருங்கிணைந்த அணுகுமுறை மிக அவசியம் என்று வலியுறுத்தினார்.

அவர் எழுதிய 'டயாபெட்டிக் ஃபுட்' (Diabetic Foot) குறித்த புதிய புத்தகமும் இந்த விழாவில் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் சர்க்கரை நோயாளிகளின் பாதப் பாதுகாப்பு குறித்த உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இந்தியாவில் கொண்டு சேர்க்கும் ஒரு மைல்கல்லாகும்.



















