தவெக வேட்பாளருக்கு ஆதரவாக திமுக நிர்வாகி; திருநாவுக்கரசர் மகனுக்கு நெருக்கடி? - ...
`சின்னமெல்லாம் தீர்ந்துபோச்சு' தமிழகத்தை அதிரவைத்த சட்டமன்றத் தொகுதி பற்றித் தெரியுமா?| Vote Vibes
இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் திகைக்க வைத்து, வரலாற்றில் தடம் பதித்த ஒரு தமிழக சட்டமன்றத் தொகுதி பற்றித் தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து வரலாற்றில் தடம் பதித்த தொகுதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி.

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற சமயம். 1991 முதல் 1996 வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது மொடக்குறிச்சி தொகுதியைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் நதிநீர் பங்கீட்டுப் பிரச்னை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர். ஆனால், அப்போதைய அரசு இதற்கு செவிமடுக்கவில்லை.
களமிறங்கிய 1,033 வேட்பாளர்கள்
தங்கள் கோரிக்கைகளை மாநில மற்றும் மத்திய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டுசெல்ல, விவசாயிகள் ஒரு நூதனமான முடிவை எடுத்தனர். ஒவ்வொரு விவசாயியும் ஒரு வேட்பாளராக அந்தச் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கினர்.
சாதாரணமாக ஒரு தொகுதியில் ஓரிரு சுயேச்சை வேட்பாளர்களே போட்டியிடும் நிலையில், மொடக்குறிச்சியில் மட்டும் அன்று 1,033 வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இதில் 1,005 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர்.

தேர்தல் ஆணையத்திற்கு எழுந்த சிக்கல்
1033 பேர் போட்டியிட்டதால் தேர்தல் ஆணையம் ஸ்தம்பித்துப் போனது. வழக்கமான வாக்குச்சீட்டிற்குப் பதிலாக 120 பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகத்தையே தேர்தல் ஆணையம் அச்சிட வேண்டியிருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் இருந்த வழக்கமான சின்னங்கள் அனைத்தும் தீர்ந்து போனதால், நூற்றுக்கணக்கான புதிய சின்னங்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசன் 64,436 வாக்குகள் பெற்று வெற்றியடைந்து எம்.எல்.ஏ ஆனார்.

கட்டுபாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்
இந்த மொடக்குறிச்சி சம்பவத்திற்குப் பிறகு, வேட்பாளர்கள் போட்டியிடுவதற்கான டெபாசிட்டை (வைப்புத்தொகை) கணிசமாக உயர்த்தியது, தேவையற்ற வேட்புமனுத் தாக்கல்களைத் தவிர்க்க பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது எனப் பல கடுமையான கட்டுப்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்தது.












