ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்...
சிவகாசி: மகளைக் காதலித்த 2 இளைஞர்களை அடுத்தடுத்து கொலை செய்த தந்தை; சிக்கியது எப்படி?
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகிலுள்ள செவளூரைச் சேர்ந்தவர் பிரபாகரன். லாரி டிரைவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் 17 வயது மகளைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தெரிந்த சுரேஷ், பிரபாகரனைக் கண்டித்தாராம். ஆனால், பிரபாகரன் தொடர்ந்து அச்சிறுமியிடம் பேசி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு மதியம் வீட்டை விட்டு வெளியே வந்த பிரபாகரன் அதன் பின் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், பிரபாகரனின் பெற்றோர் எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

போலீஸாரின் விசாரணையில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே பிரபாகரனுக்கும், சுரேஷுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் சந்தேகத்தின் அடிப்படையில் சுரேஷைத் தேடினர். கொத்தனேரி பகுதியில் படுத்துக்கிடப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்றனர்.
மதுபோதையில் படுத்துக்கிடந்த சுரேஷிடம் விசாரணை நடத்தியதில், தனது நண்பர் விக்னேஷ்வரன் மூலம் மது அருந்த அழைத்து பிரபாகரனை கழுத்தை அறுத்து கொலை செய்து அங்குள்ள கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீஸார் சுரேஷைக் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம், “கடந்த செப்டம்பர் மாதம், மகளின் காதல் விவகாரத்தில் தன் மகளுக்கு சகோதரன் உறவு முறையான தமிழரசன் என்பவரை தன் மகன் சங்கரபாண்டி அவரது நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதாகி சிறை சென்றார் சுரேஷ். கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.

சிறையிலிருந்தபோது அவருடன் நட்பாகப் பழகிய விக்னேஷ்வரன் என்பவரின் உதவியில்தான் பிரபாகரனைக் கொலை செய்துள்ளார் சுரேஷ். சுரேஷ் மீது 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். கொலை செய்தவர், கொலை செய்யப்பட்டவர் என அனைவருமே ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள்தான்” என்றனர்.
மகளின் காதலுக்காக அடுத்தடுத்து இரண்டு கொலைச் சம்பவங்களை அரங்கேற்றியுள்ளது சிவகாசியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

















