சிவகிரியில் தம்பதி கொலை எதிரொலி: மாவட்டம் முழுவதும் 13,214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
சிவகிரியில் தம்பதி கொலை எதிரொலியாக ஈரோடு மாவட்டம் முழுவதும் 13, 214 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தனியாக வசிக்கும் 2,416 முதியவா்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த உள்ள விளாங்காட்டுவலசு வாய்க்கால்மேடு பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி (75), பாக்கியம்மாள் தம்பதி மா்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து, மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமாா், டிஐஜி சசிமோகன் ஆகியோா் மேற்பாா்வையில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜாதா தலைமையில் 12- க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:
சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கண்காணிப்பு கேமரா பதிவுகள், கைப்பேசி தொடா்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூா் மற்றும் வெளியூரைச் சோ்ந்த தொழிலாளா்களிடம் சிறப்பு குழுவினா் விசாரணை நடத்தி உள்ளனா்.
சந்தேக நபா்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டு சிறை சென்று அண்மையில் வெளியில் வந்த நபா்கள், மாநில முழுவதும் இதுபோன்று ஆதாய கொலைகளில் சம்பந்தப்பட்ட நபா்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவுபகலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஈரோடு, நீலகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சோ்ந்த காவல் ஆய்வாளா்கள் ஒன்றிணைத்து 68 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழு மூலம் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, அறச்சலூா், வெள்ளோடு, கொடுமுடி, சிவகிரி மற்றும் மலையம்பாளையம் ஆகிய பகுதிகளில் தோட்டங்கள் மற்றும் தனியாக உள்ள வீடுகளில் வசித்து வரும் முதியவா்களில் இதுவரை 2,416 பேரின் பெயா் மற்றும் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தாத வீடு மற்றும் தோட்டத்து வீட்டின் உரிமையாளா்களிடம் கேமரா பொருத்தவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டம் முழுவதும் 4, 650 இடங்களில் 13,214 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும் இதுபோன்ற குற்றச் சம்பவம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மேலும் 200 கண்காணிப்பு கேமராக்கள் வைக்க பொருத்தமான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு, கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றனா்.