Mammootty: " `லோகா' படத்தில் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" - மம்மூட்டி கலகல
“தொகுதிகளை குறி வைத்து காய் நகர்த்துகிறாரா மாப்பிள்ளை?” - தென் மாவட்ட விசிட் பின்னணி
தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும், முதல்வரின் மருமகன் சபரீசன் தி.மு.க நிர்வாகிகளிடம் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் சபரீசன் மேற்கொண்ட இந்த விசிட் தி.மு.க வினரால் உன்னிப்பாக கவனிக்கபடுகிறது.
தி.மு.க தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் மருமகன் சபரீசன், கடந்த வாரம் வில்லிவாக்கத்தில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார ஆலோசனை கூட்டத்தில் நேரடியாக பங்கெடுத்தார். தி.மு.கவின் அதிகாரபூர்வ நிகழ்விலோ, தேர்தல் பிரசார கூட்டங்களிலோ தலைக்காட்டாமல் இருந்த சபரீசனின் இந்த மூவ்வை தி.மு.க வினரே ஆச்சர்யத்தோடு பார்த்தனர். ஆனால், வில்லிவாக்கம் தொகுதி தி.மு.க வேட்பாளர் கார்த்திக் மோகன், சபரீசனின் நண்பர் என்பதால் நண்பருக்காக இந்த பிரசார கூட்டத்திற்கு வந்திருக்கிறார் என்றார்கள் தி.மு.க வினர்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தென் மாவட்டங்களில் சபரீசன் தொடர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கன்னியாக்குமரி, துாத்துக்குடி, திருநெல்வேலி என மூன்று மாவட்டங்களில் உள்ள தி.மு.க நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தி.மு.க வேட்பாளர்களை அழைத்து நேரடியாக தொகுதி நிலவரம் குறித்து கேட்டுள்ளார்.
மேலும், சில தொகுதிகளில் தி.மு.க-வுக்கு நெருக்கடியாக இருந்துள்ளது. குறிப்பாக கன்னியாக்குமரி மாவட்டத்தில் இரண்டு தொகுதிகள் தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடியாக இருப்பதாக அங்குள்ள உடன்பிறப்புகள் சொல்லியுள்ளார்கள். அதனை கேட்டுக்கொண்ட சபரீசன், அதை சரிகட்ட என்ன செய்ய வேண்டும்? என்று நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறார்.
“தற்போது அவர், பயணம் மேற்கொண்ட மூன்று மாவட்டங்களுக்கும் மண்டல பொறுப்பாளராக தி.மு.க-வின் எம்.பி கனிமொழி இருக்கிறார். அவர் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால், அந்த தொகுதிகளை நேரடியாக அவரால் கண்காணிக்க முடியவில்லை. எனவே, முதலில் அந்த மூன்று மாவட்டங்களுக்கு சபரீசன் சென்று தொகுதி நிலவரங்களை கேட்டறிந்துள்ளார். அதோடு திருநெல்வேலியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சபரீசனின் சாய்ஸ் என்பதால், திருநெல்வேலிக்கு கூடுதல் முக்கியதும் கொடுத்திருக்கிறார்” என்கிறார் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க பிரமுகர் ஒருவர்.

இதை தாண்டி தி.மு.க தலைமை ஒவ்வொரு தொகுதிக்கு இருபது ஸ்வீட் பாக்ஸ்கள் வரை செலவழிக்க திட்டமிட்டுள்ளதாம். சில இடங்களில் தேவை அதிகமாக இருப்பதால், அது குறித்தும் நேரடியாக அறிந்துக்கொள்ளவும் தலைமை சார்பில் சில பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாம்.
இந்த மூன்று மாவட்டங்கள் மட்டுமல்லாமல், மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அடுத்தடுத்து இவர் பயணப்பட இருக்கிறாராம். எந்தெந்த தொகுதிகளில் தி.மு.க வீக்காக இருக்கிறது என்கிற விவரங்களை பென் நிறுவனத்தின் மூலம் வாங்கி, அந்த தொகுதிகளை சரி கட்டும் வேலையை சபரீசனே மேற்கொள்ள உள்ளார் என்கிறார்கள் அறிவாலயத்திற்கு நெருக்கமானவர்கள்.
















