தேர்தல் பரபரப்பு: `அரசியல் ஆதாயம்; பெற்றோர்களே உஷார்' - எச்சரிக்கும் குழந்தைகள் ...
சென்னையில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று மாலை கோவை, பழநி மற்றும் உடுமலைப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த மழை பெய்தது. கோவையில் மாலை 4.15 மணியளவில் தொடங்கிய மழையினால் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து மற்றும் மின்சாரம் சுமார் 5 மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பழநி பகுதியில் மாலை 6 மணியளவில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டியது. மார்ச் முதல் மே வரையிலான கோடை வெப்பத்தில் தவித்த மக்களுக்கு இந்தத் திடீர் மழை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
இன்று (மே 1) காலை 10 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை தமிழகம் வழியாக நிலவுவதால், இன்றும் நாளையும் மாநிலத்தின் பல இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளை கூடுதலாக மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் மே 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை தொடரும் என்றும், மே 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மழை பெய்தாலும், மே 4 வரை வெப்பநிலையில் பெரிய மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்ஸியஸாக இருக்கும். அதிகப்படியான ஈரப்பதம் காரணமாகச் சென்னையில் ஒருவித அசௌகரியமான சூழல் நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.










