சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கி...
சென்னை: ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் - டிராவல்ஸ் அதிபர் சிக்கிய பின்னணி!
சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது. அதன்படி 15.7.2026-ம் தேதி திருவல்லிக்கேணி, தசூதீன்கான் தெருவில் உள்ள லாட்ஜிக்கு தனிப்படை போலீஸார் சென்றனர். பின்னர் அங்குள்ள அறைகளில் போலீஸார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சபீக் ரகுமான் (37) என்பவர் தங்கியிருந்த அறையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு கரசன்சிகள் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸார், விசாரணைக்காக சபீக் ரகுமானை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் கள்ள நோட்டுகள் எனத் தெரியவந்தது. அதன் மதிப்பு 11 லட்சம் ரூபாயாகும்.

கள்ள நோட்டுக்கள் குறித்து சபீக் ரகுமானிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். இதுதவிர அவரிடம் 11,21,300 ரூபாயும், 25,000 Euro கரன்சிகளும் இருந்தன. வெளிநாட்டு கரன்சியின் இந்திய மதிப்பு சுமார் 27 லட்சம் ரூபாயாகும். வெளிநாட்டு கரன்சி குறித்தும் சபீக் ரகுமானிடம் விசாரித்து வருகிறார்கள். அவரிடமிருந்த இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை ஆய்வு செய்து வருகிறார்கள். விசாரணை வளையத்துக்குள் இருக்கும் சபீக் ரகுமான், டூர்ஸ் மற்றும் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருக்கு கள்ள நோட்டுகள் சப்ளை செய்தது யார் என்று விசாரித்து வருகிறார்கள். அவர் அளிக்கும் தகவலின் அடிப்படையில் கள்ள நோட்டு கும்பலின் பின்னணி தெரியவரும் என்கிறார்கள் போலீஸார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``இந்த வழக்கில் சிக்கியிருக்கும் சபீக் ரகுமானின் பின்னணி குறித்து விசாரித்த போது தஞ்சாவூரைச் சேர்ந்த கள்ள நோட்டு பிசினஸ் கும்பலைச் சேர்ந்த ரவிசந்திரன் குறித்த தகவல் தெரியவந்தது. உடனடியாக ரவிசந்திரனைப் பிடித்து விசாரித்தபோது அவர் மலேசியாவில் பணியாற்றிய போது அங்குள்ள கள்ளநோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அந்தக் கும்பலிடமிருந்து கள்ளநோட்டுகளை வாங்கி சென்னையில் புழக்கத்துக்கு விட்டது தெரியவந்திருக்கிறது. இந்தக் கள்ள நோட்டு கும்பலில் பெண் ஒருவருக்கும் தொடர்பு இருக்கிறது. அவரும் எங்களின் சந்தேக வளையத்திலிருக்கிறார். இந்த வழக்கில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பதால் சி.பி.சி.ஐ.டி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்''என்றனர்.















