Mrunal Thakur: "பச்சை நிறமே பச்சை நிறமே" - மிருணாள் தாக்கூர் லேட்டஸ்ட் போட்டோ ஆல...
`சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும்!' - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்
மதுரை ஆதீனத்தை இன்று மதுரையில் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மடத்திற்கு வர வேண்டும் என மதுரை ஆதீனம் அழைப்பு விடுத்திருந்தார், மரியாதை நிமித்தமாக சந்தித்தேன், ஆதீனத்துடனான சந்திப்பில் எந்த உள்நோக்கமும் இல்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு பாஜகதான் காரணம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, இப்போது அதிமுகவில் நிலவும் உட்கட்சிப் பூசல் வெறும் கண்துடைப்புதான்.
தவெக.வுக்கு ஒரு கவுன்சிலர் கூட கிடையாது, துரியோதனனிடம் சென்றது போல சேராத இடம் சேர்ந்துள்ள செங்கோட்டையனுக்கு தோல்விதான் கிடைக்கும். இந்த தேர்தலில் உறுதியாக தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்.
டிடிவி தினகரன் எங்கள் கூட்டணியை விட்டு வெளியேறி விட்டார், இனிமேல் அவரை எப்படி அழைக்க முடியும்? கடந்த சட்டமன்றத் தேர்தலில் அமமுக எங்களுடன் இல்லை, நட்பு ரீதியாக டிடிவி தினகரனோடு பேசிவருகிறேன்.
அண்ணாமலை உறுதியாக தனிக்கட்சி தொடங்க மாட்டார், என்ன பிரச்னை வந்தாலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தேர்தலை சந்திப்போம், அதில் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு சொன்ன எதையும் செய்யவில்லை, ஆயிரம் தடுப்பணைகள் கட்டப்படும் என ஆயிரம் தடவை துரைமுருகன் சொன்னார், ஆனால் தடுப்பணை கட்டவில்லை. கடந்த பொங்கலுக்கு மக்களுக்கு ஆயிரம் ரூபாய்கூட கொடுக்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுப்பார்கள், தேர்தலுக்கான அரசுதான் இந்த திமுக அரசு.
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான தீர்ப்பு வந்தது இயற்கையானது, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் கலவரத்தைத் தூண்டக் கூடியவரே சு.வெங்கடேசன்தான். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதில் யாருக்கும் சங்கடம் உள்ளதா? நடைமுறை சிக்கல் எதுவும் இல்லை" என்றார்.















