ஈரானுக்கு கிடைக்கும் $12 பில்லியன்: 'உணவுக்கும், மருந்துக்கும் தான்' ட்ரம்ப் தகவ...
'ஜாக்கிரதையாக இருங்கள்; நாங்கள் திமுகக்காரர்கள்' - மாநகராட்சி கூட்டத்தில் சீறிய திமுக கவுன்சிலர்
சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் ரிப்பன் பில்டிங்கில் நடந்து வருகிறது. இதில் நேரமில்லாத நேரத்தின் போது பேசிய திமுக கவுன்சிலர் கவி கணேசன் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்திருந்தார்.

கவி கணேசன் பேசியதாவது, ``முதல்வர் விஜய்க்கு தன்னுடைய துறைகள் என்னவென்றே தெரியவில்லை. எங்களின் தலைவர் ஸ்டாலினுக்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணி குறித்து பரந்துபட்ட அனுபவம் உண்டு.
நீங்கள் முதல்வராக இருந்தாலும், இந்த மாநகராட்சி முத்துவேல் கருணாநிதி கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.
நாங்கள்தான் மக்களுக்கு நெருக்கமான அரசு. உள்ளாட்சி எங்கள் கையில்தான் இருக்கிறது.
பல மாநகராட்சிகளில் முதல்வர் விஜய்யின் படத்தை தவெகவினர் தூக்கிக் கொண்டு வருகின்றனர். இவர்கள்தான் உள்ளாட்சியின் மாண்பை குலைக்கின்றனர். உள்ளாட்சி அரசு எங்கள் கையில்தான் இருக்கிறது. நாங்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.

மண்டல குழுவின் கூட்டத்தில் மண்டல தலைவருக்கு இணையாக தவெக எம்.எல்.ஏ வந்து உட்கார்ந்தார். அது தவறு. தவெக எம்.எல்.ஏக்கள் வந்தால் அவர்களுக்கான இடத்தில் அமர்ந்து செல்ல வேண்டும். 150 பேரை கூட்டி கொண்டு வருவீர்களா? காலி கிரவுண்ட்டில் நீங்கள் கம்பு சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். ஜாக்கிரதையாக இருங்கள். நாங்கள் திமுகக்காரர்கள்.
அம்மா உணவகத்தில் போய் தவெகக்காரர்கள் சோதனை என்ற பெயரில் தோசை ஊற்றி கேட்கின்றனர். முதல்வர் இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறாரா? தூங்கிக் கொண்டிருக்கிறாரா?' என்றார்.













