திருச்சி: திருமணம் மீறிய உறவில் கணவர்; தட்டிக் கேட்ட மனைவியை நிர்வாணமாக்கி தாக்க...
இருமுறை மேயர்; அமமுக அமைப்புச் செயலாளர்! - தவெக-வில் இணையும் முயற்சியில் சாருபாலா தொண்டைமான்?
அமமுக முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான சாருபாலா தொண்டைமான் விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, தவெகவின் மூத்த தலைவரும் அமைச்சருமான செங்கோட்டையனை சாருபாலா தொண்டைமான் சமீபத்தில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின்போது, தவெகவில் இணைந்து செயல்பட விருப்பம் இருப்பதை அவர் தெரிவித்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாருபாலா தொண்டைமான், 2001 மற்றும் 2005-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி மாநகராட்சியின் மேயராக இருமுறை பதவி வகித்தவர். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜி.கே. வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸில் சிறிது காலம் செயல்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். தற்போது அக்கட்சியின் அமைப்புச் செயலாளராக இருந்து வருகிறார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள் மற்றும் கட்சி தாவல்கள் அதிகரித்து வரும் நிலையில், சாருபாலா தொண்டைமானின் இந்த அரசியல் நகர்வு குறித்த தகவல்கள் கவனம் ஈர்த்துள்ளது. குறிப்பாக, மத்திய மற்றும் தென் மாவட்டங்களில் அவருக்கு உள்ள அரசியல் தொடர்புகளும், சமூக செல்வாக்கும் தவெகவுக்கு பலம் சேர்க்கக்கூடும் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், தவெகவில் இணைவது தொடர்பாக சாருபாலா தொண்டைமான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், இது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.!













