`அப்செட்டான ரஜினி; டெல்லி கொடுத்த சிக்னல்' - அறிக்கைக்கு பின்னால் நடந்த அரசியல்!
``ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!” - அடித்து ஆடும் பன்னீர்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற தலைப்பில் நடந்தது. இதில், அமைச்சர் கீதா ஜீவன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், ``அண்ணா ஆரம்பித்த தி.மு.க-வில் என்னை இணைத்த முதல்வருக்கு என்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தி.மு.க கூட்டணியில் இருந்து இதுவரை யாரும் வெளியே போகவில்லை. நிரந்தரக் கூட்டணியாகத்தான் உள்ளது.

புதிதாக தே.மு.திக இணைந்துள்ளது. அ.தி.மு.க கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தபோது ராஜ்யசபா உறுப்பினர் சீட் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தத்தை துச்சம் என தூக்கி எறிந்தார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், ஒப்பந்தமே போடாமல் தி.மு.க., தே.மு.தி.கவிற்கு ராஜ்யசபா சீட் வழங்கியிருக்கிறது. லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தினார் எடப்பாடி பழனிசாமி. தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தையும் நிறுத்தினார்.
இப்படி ஜெயலலிதா மக்கள் நலனுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறுத்தினார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஸ்டாலின் ஆகிய நால்வருமே மக்களால் ஓட்டு போட்டு முதல்வர் ஆனவர்கள்.
ஆனால், நான் உட்பட மற்றவர்கள் அப்பாயிண்மென்ட். எடப்பாடி பழனிசாமியைப் பற்றி நான் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் எனக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

சசிகலாவின் காலில் விழுந்து முதலமைச்சர் பதவி பெற்றுக் கொண்டு, தற்போது சசிகலாவைப் பார்த்து ஏதோ குறைக்கிறது என்கிறார். அப்படிச் சொல்லலாமா? உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். அ.தி.மு.கவை அழித்த வரலாற்றுப் பெருமை இவர்களையே சாரும். என்னைப் பற்றியோ நான் கடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேச அவர்களுக்கு அருகதை இல்லை” என்றார்.















