`எதிர்க்கட்சிகளின் கருத்துகளைக் கேட்டு செயல்படும் அரசு' - த.வெ.க அரசுக்கு அன்பும...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகள்! - விரைவில் டெண்டர்
தமிழ்நாட்டில் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 2,000 மின்சார ஏசி பேருந்துகளை வாங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் நடைமுறைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போக்குவரத்துத் துறையின் வருவாயை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு தரமான மற்றும் நவீன வசதிகளை வழங்குவதற்கும் பல்வேறு செயல்திட்டங்களை தமிழக அரசு கட்டம் கட்டமாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், பொதுமக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் பார்த்திபன், “ஏசி பேருந்துகளில் பயணம் செய்வது என்பது உயர்ந்த வருமானம் கொண்டவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை மாற்ற வேண்டும். சாதாரண பொதுமக்களும் ஏசி பேருந்துகளில் பயணம் செய்யும் வசதியை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களுக்குள் 2,000 புதிய மின்சார ஏசி பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக விரைவில் டெண்டர் கோரப்படும் என கூறப்படுகிறது.

புதிய பேருந்துகள் முதற்கட்டமாக சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையேயான வழித்தடங்களில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதன் மூலம் எரிபொருள் செலவைக் குறைப்பதுடன், கார்பன் உமிழ்வையும் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும். மேலும், பராமரிப்பு செலவுகளும் குறைவாக இருக்கும் என்பதால், நீண்ட கால அடிப்படையில் போக்குவரத்து கழகங்களின் நிதி நிலை மேம்பட உதவும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே பல நகரங்களில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது 2,000 புதிய ஏசி மின்சார பேருந்துகளை இணைக்கும் திட்டம், மாநில பொதுப் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.!















