`இந்தியா - இலங்கை மீனவர் பிரச்னையை மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும்!' - இலங்கை எம்...
தவெக ஆட்சி: "38 நாள், 150 போக்சோ வழக்குகள், 126 பாலியல் குற்ற வழக்குகள்" - இபிஎஸ் கடும் விமர்சனம்
முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியிருக்கிறது.
இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் புதியவர்கள் என்பதால், சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

இரண்டு நாள்கள் பயிற்சி முகாமை முடித்துவிட்டு, இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டார்கள்.
இன்றைய அமர்வு முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார் அதிமுக-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
அவர், "ஆளுநர் உரையில் பல்வேறு திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு எந்தத் திட்டங்களும் அந்த உரையில் இடம்பெறவில்லை.
வெள்ளை அறிக்கையில் இடம்பெற்ற செய்திதான், இந்த உரையிலும் இருந்தது. இந்த ஆட்சியில் இதுவரை சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
போதைப்பொருள் விற்பனை முன்பைவிட இப்போது அதிகமாகி இருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 38 நாட்கள் ஆகின்றன.
இதில் 150 போக்சோ வழக்குகள், 126 பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் இந்த நாட்களில் பதிவாகி இருக்கின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வீர வசனம் எல்லாம் பேசினார்கள்.
இந்த அரசு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு அறிவிக்கப்படாமல் ஆங்காங்கே மின்வெட்டு நடைபெறுகிறது. இதனால் மக்கள் பாதிப்படைகின்றனர்.
பலரின் தூக்கத்தை இந்த தவெக அரசு கலைத்திருக்கிறது. தேவையான மின்சாரத்தைக் கொள்முதல் செய்து தடையில்லா மின்சாரத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசு வெவ்வேறு காரணங்களைச் சொல்லத்தான் முற்படுகிறது" என்றார்.



















