'80 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் விஜய்?' - குழப்பத்தில் நி...
`தாமிரபரணி மணல் கொள்ளையை எதிர்த்து போராடி வென்றவர் நல்லகண்ணு ஐயா' - ஸ்ரீவைகுண்டம் விவசாயிகள் கண்ணீர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. வயது மூப்பு காரணமாக நேற்று (24-ம் தேதி) உயிரிழந்தார். அவரது சொந்த ஊர், தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம். அவரது மறைவையொட்டி அவர் கல்வி பயின்ற குமரகுருபரர் தொடக்கப்பள்ளி மற்றும் மேல் நிலைப்பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். இந்த இரண்டு பள்ளிகளுக்கும், குமரகுருபரர் கல்லூரிக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

``தனது 18வது வயதிலேயே கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பல்வேறு போரட்டங்களில் ஈடுபட்டவர். 1940களில் நடந்த நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் இருந்தார். அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால், நிலமற்ற ஏழை விவசாயிகளின் கூலி உயர்வுக்காக பல போராட்டங்களை முன்னெடுத்தவர். ஸ்ரீவைகுண்டம் மட்டுமல்ல தமிழகத்தில் எங்கு விவசாயிகளின் பிரச்னை தலைதூக்கினாலும் முதல் ஆளாக நிற்பவர் நல்லகண்ணு.
தாமிரபரணி ஆற்றின் வடகால், தென்கால் பாசனங்கள் மூலம்தான் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள 43,500 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அத்துடன், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர்த்தேவையை முழுமையாகவும், தென்காசி, விருதுநகர் மாட்டத்தின் பகுதித் தேவையையும் பூர்த்தி செய்கிறது. தாமிரபரணி ஆற்றைத் தூர்வாருகிறோம் என்ற பெயரில் மணல் மாஃபியாக்கள் ஆற்று மணலை அள்ளி விற்பனை செய்து வந்ததை அறிந்து விவசாயிகள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

அந்த நேரத்தில் விவசாயிகளுடன் கரம் கோர்த்து மணல் கொள்ளையை எதிர்த்து பெரும் போராட்டங்கள் நடத்தியதுடன், நீதிமன்றத்தில் தடை உத்தரவையும் பெற்று மண் வளத்தை காத்தார். அவரது இழப்பு என்பது ஈடு செய்ய முடியாதது.” என்றனர். விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்ரீவைகுண்டம் ஊரே சோகத்தில் மூழ்கியுள்ளது.











