`தோழருக்கு செவ்வணக்கம்' - வைகோ, ரஜினி, சீமான், பிரேமலதா உள்ளிட்டோர் நல்லகண்ணு உட...
நல்லகண்ணு: "அண்ணா, காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை இவரிடம் பார்த்தேன்" - ரஜினிகாந்த்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நேற்று பிற்பகல் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் உடல் தியாகராயர் நகரில் இருக்கும் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.
இன்று மாலை 4 மணியளவில் அரச மரியாதையுடன் அவரின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆய்வுப் படிப்புக்காக ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று காலை முதலே அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் அடிப்படையில் நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணுவுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, ``நான் ஓமந்தூராரைப் பார்த்ததில்லை, அறிஞர் அண்ணாவை, காமராஜரை, கக்கனைப் பார்த்ததில்லை. அவர்கள் எல்லோரையும் சேர்த்தது போல ஐயா நல்லகண்ணுவைப் பார்த்தேன்.
நல்லவராக, நேர்மையானவராக, எளிமையாக இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வரும் என்பதற்கு நல்லகண்ணு ஒரு எடுத்துக்காட்டு. மாபெரும் ஆத்மா தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கம்" என்றார்.
அதைத் தொடர்ந்து அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ``ஐயா நல்லகண்ணு அவரின் உடலை மருத்துவமனைக்குக் கொடுத்திருக்கிறார். உண்மையில் ஈடு இணையில்லா இழப்பு இது. நிச்சயம் நல்லகண்ணுவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனத் தே.மு.தி.க சார்பில் கோரிக்கை வைக்கிறோம்.
ஒரு அரசியல்வாதி எப்படி வாழ வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணம். வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக உழைத்த அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்" என இரங்கல் தெரிவித்தார்.












