`உங்கள் AI அசிஸ்டன்ட் என்ன செய்கிறது? இனி எல்லாமே தெரியும்!'- வருகிறது கூகுளின் ...
திண்டுக்கல்: தனியார் மருந்தகத்தில் கொத்து கொத்தாக கைப்பற்றபட்ட போதை தரும் மாத்திரைகள்; வாலிபர் கைது!
தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திண்டுக்கல் நகர் காவல்நிலைய டிஎஸ்பி கார்த்திக் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போதையில் வாகன ஓட்டி வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்ததில், அவர்கள் போதை மாத்திரைகள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்தது.
வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தினால் மதுவை விட அதிகளவில் போதை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த மாத்திரைகள் சந்துக்கடை அருகே சிட்டி மருந்தகம் வாங்கியதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து மருந்து ஆய்வாளர் மகேஸ்வரன் உதவியுடன் வடக்கு காவல்துறையினர் சிட்டி மருந்தகத்தை நேற்று முன்தினம் சோதனை செய்தனர்
அப்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மாத்திரைகள் உரிய கொள்முதல் ரசீது மற்றும் ஆவணங்கள் இல்லாமல் வைத்திருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து கடையை நிர்வாகித்து வந்த ஆரிப் அகமது கைது செய்யப்பட்டார். மேலும், அவரது தந்தையும் கடையும் உரிமையாளருமான அப்துல்லா பாட்ஷா தலைமுறைவாகியுள்ளார்.

மேலும் கடையிலிருந்து 17,737 ஆவணங்கள் இல்லாத மாத்திரைகளும், மருந்துகளை கலக்கும் 293 ஆய்வக குப்பிகள் மற்றும் 20 ஊசிகள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், முதற்கட்ட விசாரணையில் சிட்டி மருந்துகத்திற்கு கீழ்தளத்திற்கு மருந்து வைப்பதற்கு அனுமதி பெற்று மேல் தளத்தில் அனுமதி இல்லாத இடத்தில் மருந்துகள் வைக்கப்பட்டு இருப்பதும், மருந்துகளுக்கு தேவையான கொள்முதல் ரசீதுகள் இல்லாததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணை முடிந்து ஆரிப் அகமதுவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். திண்டுக்கல்லில் போதை தரக்கூடிய மாத்திரைகள் உரிய அனுமதி இல்லாமல் வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















