திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி: தவெக எம்எல்ஏ-கள் ராஜினாமா செய்ய முடிவா? | Tamilnadu Live Updates
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் மாநில அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது.
108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தங்களை ஆட்சியமைக்க அழைக்காத ஆளுநரின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்லத் திட்டமிட்டுள்ளது.
ஆளுநர் ஆர்.வி. அர்லேகர், விஜய்யின் ஆட்சியமைக்கும் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
"ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான ஆதரவு கடிதங்கள் இல்லை" என ராஜ்பவன் தெரிவித்துள்ளது.

திமுக நடத்திய நிர்வாகிகள் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு "அவசரகால முடிவுகளை" எடுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் ஒரு தேர்தலைத் தவிர்க்கவும், 'சமூக விரோத சக்திகள்' உள்ளே வருவதைத் தடுக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராகவும், அவருக்கு திமுக வெளியில் இருந்து ஆதரவு அளிக்கவும் ஒரு திட்டம் ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் கசிகின்றன.
பல தசாப்தங்களாக எதிரும் புதிருமாக இருந்த இரு கட்சிகள் இணைவதை மக்கள் ஏற்கும் விதமாக இருக்குமா? என்ற அச்சம் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு உள்ளது.
அதிமுக நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், "தவெக-வுடன் கூட்டணி கிடையாது; கட்சித் தாவல் பேச்சுக்கே இடமில்லை" என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இன்னும் இரண்டு நாள்களுக்கு அமைதி காக்குமாறு தனது எம்.எல்.ஏ-க்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நிலையில்தான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கைகோர்த்து ஆட்சியமைக்க முயன்றால், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாகப் பதவி விலக வேண்டும் என அக்கட்சித் தலைமை தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, இரு கட்சிகளும் ரகசியக் கூட்டணியில் ஈடுபடுவதாக தவெக சந்தேகிப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியமைக்கப் போவது யார்? அல்லது மீண்டும் ஒரு தேர்தல் வருமா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.


















