"கவிஞர்கள் ஒரு வரியை இருமுறை ஆழமாக சொல்வது வழக்கம்" - கே.என்.நேருவுக்கு விஸ்வநாத...
திருச்சி: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது; மற்றொரு இளைஞரைத் தேடும் போலீஸ்
அரியலூர் மாவட்டம், திருமனூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ ஹெல்த் அசிஸ்டன்ட் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இதற்காக, அங்குள்ள தனியார் மகளிர் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி இரவு சுமார் 7.30 மணியளவில் சிறுமி விடுதியிலிருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறியுள்ளார்.
இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் சிறுமி காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஜூலை 20-ம் தேதி தஞ்சாவூர் டாண்டெக்ஸ் ரவுண்டானா அருகே இருந்த சிறுமியை தமிழ்ப் பல்கலைக்கழக பெண் காவலர் மீட்டு விசாரணை நடத்தினார். அவரது விசாரணையில் கிடைத்த அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.
சில மாதங்களுக்கு முன்பு சிறுமி தன் குடும்பத்தினருடன் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வந்தபோது, அங்குத் தற்காலிகக் காவலராகப் பணிபுரிந்த திருச்சி மாவட்டம், மருதூர் கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது: 30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் தனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து, தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி தமிழ்ச்செல்வன் அழைத்ததின் பேரில் சிறுமி தஞ்சாவூரிலிருந்து பேருந்து மூலம் சமயபுரம் சென்றுள்ளார். அங்குச் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற தமிழ்ச்செல்வன், தனது நண்பர் ஆகாஷ் என்பவருடன் சேர்ந்து சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார்.
அங்கு சிறுமியைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரியவந்தது. சம்பவம் நடைபெற்ற இடம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டது என்பதால், இந்த வழக்கு லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
தொடர்ந்து, காணாமல் போன வழக்கை போக்ஸோ சட்டப்பிரிவாக (U/s 5(l) r/w 6(1) POCSO Act) மாற்றம் செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கின் முதல் குற்றவாளியான (A1) தமிழ்ச்செல்வனைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள இரண்டாம் குற்றவாளியான (A2) ஆகாஷ் என்பவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த கோயில் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
















