தேனி: `எம்.எல்.ஏ சீட் உறுதி' - திமுக நிர்வாகியிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி; போல...
நாங்க இருக்கிறோம்! ட்ரம்ப் திட்டியபிறகு ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் ஆதரவு
அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல் காரணமாக ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை அந்நாடு மூடிவிட்டது. இதனால் அந்த நீர்வழித்தடம் வழியாக கச்சா எண்ணெயை கப்பல்கள் எடுத்துச்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து இருக்கிறது. எனவே ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க அனைத்து நாடுகளும் தங்களது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் உட்பட எந்த நாடும் அமெரிக்காவிற்கு இவ்விவகாரத்தில் நேரடியாக ஆதரவு கொடுக்க தயக்கம் காட்டி வந்தன. சில நாடுகள் நேரடியாகவே தங்களால் ஆதரவு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டன. தற்போது ஈரான் கத்தார் போன்ற வளளைகுடா நாடுகளில் எரிவாயு தொழிற்சாலை மீது ஈரான் தாக்குதல் நடத்தி இருப்பதற்கு பிரிட்டன், ஜப்பான், ஜெர்மன் போன்ற நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால் ஈரானில் இஸ்ரேல் எரிவாயு தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் தாக்குதலைக் கண்டித்து, அதன் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தின. இது தொடர்பாக அந்நாடுகள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,''ஈரானின் அச்சுறுத்தல்கள், கண்ணிவெடிகளை வைத்தல், ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் வணிகக் கப்பல் போக்குவரத்தைத் தடுப்பதற்கான பிற முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு ஈரானுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என்ற தலைவர்களின் கூட்டு அறிக்கையை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ``சர்வதேச கப்பல் போக்குவரத்தில் இத்தகைய குறுக்கீடு மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோக சங்கிலிகளின் சீர்குலைவு ஆகியவை சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. கடல் வழி சுதந்திரம் சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாகும். ஈரானின் நடவடிக்கைகளின் விளைவுகளால் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்''என்று குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் முன்னணி ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதை உறுதி செய்வதற்கான முயற்சிகளில் சேர்ந்துசெயல்பட ஒப்புக்கொண்டன.
இதற்கிடையே ஈரானிய தாக்குதல் காரணமாக கத்தாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதி திறனில் சுமார் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கத்தார் எரிசக்தி தலைமை நிர்வாக அதிகாரியும், எரிசக்தி விவகாரங்களுக்கான மாநில அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்தார். அதோடு ஈரான் தாக்குதலால் ஏற்பட்ட பழுதை சரி செய்ய 5 ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.













