திருவள்ளூர்: `ஒரு காலத்துல நல்ல வருமானம் தந்த தொழில்; ஆனா இன்னைக்கு...' - வாடும்...
'நீ நல்லா சாப்பிட்டிருக்க' - புகார் செய்த பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன்
பக்ரீத் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்றிரவு வழக்கத்தை விட அதிக கூட்டம் காணப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் பயணிகளிடம் நிலைமை புரியாமல் அடாவடியாக பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் பார்த்திபன் நேற்றிரவு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார். முறையான பேருந்து வசதி இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பயணிகள், போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் தங்களின் குறைகளை கூறினர். அப்போது ஒரு சில பயணிகளிடம் அமைச்சர் பார்த்திபன் அடாவடியாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளைஞர் ஒருவர் தான் முன்பதிவு செய்திருந்த பேருந்து நேரம் கடந்தும் இன்னும் வரவில்லை என அமைச்சரிடம் கூறினார். அதற்கு உரிய பதிலை சொல்லாத அமைச்சர் பார்த்திபன் அந்த இளைஞரை நோக்கி, 'நீ நல்லா சாப்பிட்டிருக்க...நான் இன்னும் சாப்பிடல...நீ நல்லா சாப்பிட்டிருக்க நான் இன்னும் சாப்பிடல...' என எரிச்சலூட்டும் தொனியில் பேசியிருந்தார்.
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அந்த இளைஞர், '10:45 மணி பேருந்தில் நான் டிக்கெட் புக் செய்திருந்தேன். 11:30 மணியை தாண்டியும் பேருந்து இன்னும் வரவில்லை. அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை. அமைச்சரிடம் கேட்டால் சம்பந்தமே இல்லாமல் 'நீ நல்லா சாப்பிட்டிருக்க' என்கிறார். சாப்பிட்டுவிட்டு வருவதும் சாப்பிடாமல் வருவதும் என்னுடைய விருப்பம். இதெல்லாம் ஒரு பதிலா?' என அதிருப்தியாக கூறினார்.

அதேமாதிரி, நகருக்குள் இருந்து கிளாம்பாக்கத்துக்கு முறையாக பேருந்து இல்லை எனக் கூறிய பயணியிடமும் நீண்ட நேரமாக அவர் சொல்வதை சரியாக புரிந்து கொள்ளாமல் வாதம் செய்து கொண்டிருந்தார். இது போன்று பேசிவிட்டு கடைசியில், 'குறைகள் இருந்தால் சொல்லுங்கள். நிறைகள் ஆக்கிக் கொள்கிறோம்' எனக் கூறியிருக்கிறார்.
கிளாம்பாக்கத்தில் தன்னுடைய முதல் ஆய்விலேயே அமைச்சர் பயணிகளிடம் பேசிய விதம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
















