மும்பை மாநகராட்சி: ராஜ் தாக்கரே கறார், தீவிரம் காட்டும் உத்தவ் - ஆளும் கூட்டணியி...
``பவுமா, தோனியைப் போன்றவர்; இருவருக்கும் உள்ள ஒற்றுமை இதுதான்!'' - ஏபி டி வில்லியர்ஸ் விளக்கம்
தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட் உலகில் தோல்வியே காணாத கேப்டனாக ஜொலித்து வருகிறார் தென்னாப்பிரிக்காவின் டெஸ்ட் அணி கேப்டன் டெம்பா பவுமா.
1998-ல் ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபி வென்ற பிறகு, ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிரோபி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என எந்தவொரு ஐசிசி கோப்பையையும் வெல்ல முடியாமல் ஏங்கிக் கொண்டிருந்தது தென்னாப்பிரிக்கா.
அந்த 27 ஆண்டு ஏக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கடந்த ஜூன் மாதம் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்று கொடுத்தார் டெம்பா பவுமா.

தற்போது இவரது தலைமையிலான தென்னாப்பிரிக்கா, இந்தியாவை அதன் சொந்த மண்ணில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு 2–0 என ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றிருக்கிறது.
இதுவரை டெம்பா பவுமா தலைமையில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தென்னாப்பிரிக்கா, அவற்றில் ஒன்றிலும் தோல்வியடைந்ததே இல்லை. 11 போட்டிகளில் வெற்றி; ஒரு போட்டி மட்டும் மழையால் டிரா ஆனது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் ‘மிஸ்டர் 360’ என்று அழைக்கப்படுபவருமான ஏபி டி வில்லியர்ஸ், டெம்பா பவுமாவை தோனியுடன் (Dhoni) ஒப்பிட்டு பேசியுள்ளார்.

இந்திய முன்னாள் வீரர் அஸ்வினின் யூடியூப் சேனலில் அவருடனான உரையாடலில், டெம்பா பவுமாவின் கேப்டன்சி அணுகுமுறை பற்றி கேட்கப்பட்டதற்கு பதிலளித்த டி வில்லியர்ஸ், “உங்களால் ஒரு புத்தகத்தை அதன் அட்டைப் பக்கத்தை வைத்து மதிப்பிட முடியாது.
பவுமா மென்மையாகப் பேசக்கூடியவர்; பெரிதாக தனது குரலை உயர்த்திப் பேசியதில்லை.
இது அப்படியே தோனியைப் போன்றது. அவர் (தோனி) மிகவும் அமைதியானவர்; அதிகம் பேசமாட்டார்.
ஆனால் அவர் பேசும்போது, அனைவரும் அவரைக் கவனிப்பார்கள். இது இவர்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை,” என்று கூறினார்.
டெம்பா பவுமாவின் கேப்டன்சி அணுகுமுறை குறித்து உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் பதிவிடுங்கள்.



















