வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாக பிரச்னை; இடைக்கால நிர்வாகியாக விஜய்குமார் ரெட்டி -...
பிரபல ரெளடி பிறந்தநாளுக்காக நண்பர்களுக்கு வைத்த மது விருந்து பார்ட்டி - விபத்தில் 2 பேர் பலி!
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் தளபதி(36). திருவையாறு, நடுக்காவேரி காவல் நிலையத்தின் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் திருடி வந்து ஊருக்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது, டூவீலர் திருட்டு, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தன்னைப்பற்றி போலீஸாருக்கு தகவல் கொடுத்ததாக கூறி தன்னுடையச் சொந்த ஊரைச் சேர்ந்த டென்னிஸ்ராஜ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு தளபதி கொலை செய்த சம்பவம் பலரையும் நடுங்கச் செய்தது. இந்நிலையில், தளபதி தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று இரவு தளபதி மற்றும் அம்மன்பேட்டையை சேர்ந்த தமிழரசன்(27), நிதீஷ்(25), சுதர்சன்(21), நரேன்(18), அபினேஷ் (21) ஆகிய ஆறு பேரும் ஒரே காரில் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு திருவையாறு பகுதிக்கு சென்றுள்ளனர்.
தளபதி பிறந்தநாள் கொண்டாட்டமாக மது விருந்து பார்ட்டி வைத்துள்ளார். அப்போது 6 பேரும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து இன்று அதிகாலை 3 மணியளவில் திருவையாறில் இருந்து தளபதி உட்பட 6 பேரும் ஒரே காரில் அம்மன்பேட்டைக்கு திரும்பியுள்ளனர். காரை தமிழரசன் ஓட்டியுள்ளார். மது போதையில் இருந்ததால் காரை அதி வேகமாக ஓட்டியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கண்டியூர் அருகே சுற்று குளத்தான்கரை பகுதியில் சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் கார் வேகமாக மோதியுள்ளது.

இதில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்ததுடன் தளபதி மற்றும் தமிழரசன் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காருக்குள் இருந்த மற்ற 4 பேரும் படுகாயமடைந்த நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நடுக்காவேரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் ரெளடி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




















