`வண்ணத்துப்பூச்சி பூங்காவுக்கு முறையான பேருந்து வசதி இல்லையே..!'- மக்கள் எதிர்பா...
பிரிட்டன் டு கொல்லம்; மனைவியின் அந்தரங்க வீடியோவை ஆபாச தளத்தில் பதிவிட்ட நபர் - கைதுசெய்த போலீஸ்!
கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், கொட்டியம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரிட்டனில் வேலை செய்துவந்தார். அவர் மனைவி மற்றும் 4 வயது மகளுடன் பிரிட்டனில் வசித்துவந்தார். இதற்கிடையே ஊருக்கு குடும்பத்துடன் வந்த அவர் மீது அவரது மனைவி கொட்டியம் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். பிரிட்டனில் வசித்து வந்த காலகட்டத்தில் தனது அந்தரங்கக் காட்சிகளைப் படம் பிடித்து ஆபாச இணையதளங்களில் பதிவேற்றியதாக அந்த புகாரில் அவரது மனைவி தெரிவித்திருந்தார். அதுமட்டும் அல்லாது அவர் சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகும் மனைவியுடன் தனியாக இருக்கும் வீடியோவை பதிவுசெய்ய முயன்றுள்ளார். 2026 ஜூன் 2 அன்று காப்பில் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, மனைவியிடம் நெருக்கமாக இருப்பதை ரகசியமாக வீடியோ எடுக்க முயன்றுள்ளார். இதுகுறித்து கேட்டபோது மனைவியை அவர் தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், தம்பதியரின் 4 வயது மகளின் முன்பாக அவர் முறையற்ற வகையில் நடந்துகொண்டதும் அம்பலமானது.

இதனையடுத்து, பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கொட்டியம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்தனர். வழக்குகள் பதியப்பட்டதைத் தொடர்ந்து அந்த இளைஞர் தலைமறைவானார். கொல்லம் மாநகர காவல் ஆணையர் ஹேமலதா உத்தரவின்பேரில், போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி தலைமறைவாக இருந்த அவரை கைது செய்தனர்.

இது குறித்து கொல்லம் மாநகர காவல் ஆணையர் ஹேமலதா ஐ.பி.எஸ் கூறுகையில், "பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போனில் உள்ள டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். டிஜிட்டல் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தி குற்றங்களில் ஈடுபடுபவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர வேண்டும்" என்றார்.


















