"பாஜக-வின் சி டீம் தான் விஜய்; ஸ்லீப்பர் செல்" - சாடும் அமைச்சர் ரகுபதி
புதுச்சேரி: "விஜய் ஒரு சின்ன குழந்தை; சினிமா வசனத்தை மேடையில் பேசுகிறார்" - ஜெகத்ரட்சகன் காட்டம்
புதுச்சேரியில் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் தி.மு.க உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறது. அதன்படி நவம்பர் 23-ம் தேதி மண்ணாடிப்பட்டு தொகுதியில் எம்.பி ஜெகத்ரட்சன், புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த ஜெகத்ரட்சகன், ``தமிழகத்தைப் போல புதுச்சேரியையும் சிறந்த மாநிலமாக மாற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். தற்போது 21 தொகுதிகளில் தீவிர சேர்க்கை படிவத்தைத் தந்து உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி வைத்துள்ளோம். இந்த மாதத்துக்குள் மற்ற தொகுதிகளிலும் இந்தப் பணிகளை நிறைவேற்றுவோம்.

85% சதவீதம் எஸ்.ஐ.ஆர் படிவங்கள் விநியோகிக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கும் தகவல் முற்றிலும் தவறானது. அந்தப் படிவம் பட்டம் படித்தவர்களும், வழக்கறிஞர்களும் கூட நிரப்ப முடியாத அளவுக்கு கடினமானதாக இருக்கிறது.
தமிழகத்திலும், புதுச்சேரியிலும் பீகாரைப் போல் தேர்தலை நடத்த நினைக்கிறது தேர்தல் ஆணையம். பீகாரில் வேண்டுமானால் அது நடக்கலாம். தமிழகம், புதுச்சேரியில் அவர்களின் திட்டம் எடுபடாது. திட்டங்களுக்கு அனுமதி தராமல் மத்திய அரசு தமிழகத்தைப் புறக்கணிக்கிறது. புதுச்சேரியில் தற்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கும் புதுச்சேரியை ஆட்சி செய்யும் தகுதி இல்லை.
புதுச்சேரியை டெல்லியில் இருந்துதான் ஆட்சி செய்கிறார்கள். புதுச்சேரியில் என்ன அதிகாரம் இருக்கிறது ? முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பதுதான் எங்கள் தத்துவம். மக்களின் உணர்வு என்ன என்பது எங்களுக்குத்தான் தெரியும்.
வடநாட்டில் இருந்தவர்களை வைத்து ஆட்சி செய்ய வைப்பது என்ன ஜனநாயகம்? புதுச்சேரியை புதுச்சேரியில் உள்ளவர்கள்தான் ஆள வேண்டும் என்பதை தி.மு.க முன்வைக்கிறது” என்றவரிடம், "தி.மு.க-வுக்கு கொள்கை கிடையாது; கொள்ளையடிக்கத்தான் தெரியும்" என்று த.வெ.க தலைவர் விஜய் வைத்த குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்குப் பதிலளித்த அவர், ``நடிகர் விஜய் பாவம். அவர் சின்ன குழந்தை. விஜய் சொல்வதை எல்லாம் பொருட்டாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. அவர் ஒரு சினிமா நடிகர். சினிமாவில் பேசும் வசனத்தைப் போல மேடையில் பேசுகிறார்” என்றார்.
அதையடுத்து, "நீட் தேர்வை நீக்குவேன் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, ஏதும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியிருக்கிறாரே?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், ``விஜய்க்கு சட்டம் தெரியவில்லை. நீட் தேர்வு மத்திய அரசு கையில் உள்ளது. நீட் தேர்வை எதிர்த்து நீதிமன்றம் சென்றிருக்கிறோம். வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நீட் தேர்வை நீக்குவது தி.மு.க-வின் உயிர்மூச்சுக் கொள்கை. அதில் ஒரு விழுக்காடுகூட பின்வாங்காமல் செயல்படுகிறோம்.
எங்கள் எதிரில் எதிரிகளே இல்லை. அதேசமயம் மக்கள் ஆதரவு உள்ளது. லாட்டரி அதிபர்கள் புதுச்சேரிக்குச் சுற்றுலாவினராக வந்திருக்கின்றனர்” என்றார்.















