RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" - ஆட்டநாயகன் வைபவ் சூ...
புனே: குடிபோதையில் கார் ஏற்றி இருவரைக் கொன்ற சிறுவன்; மகனின் ஜாமீனை ஆடிப்பாடி கொண்டாடிய தந்தை
புனேயில் கடந்த 2024ம் ஆண்டு இரவில் தேநீர் அருந்த வெளியில் வந்த ஒரு பெண் உட்பட இரண்டு எஞ்சினியர்களை மைனர் வாலிபர் ஒருவர் குடிபோதையில் கார் ஏற்றிக் கொன்றார்.
இக்கொலை சம்பவம் பெரிய அளவில் பேசப்பட்டது. மைனரைக் காப்பாற்ற அரசியல்வாதிகள் தலையிட்டனர். அதோடு அந்த வாலிபருக்கு அவர் கைது செய்யப்பட்ட காவல் நிலையத்தில் ராஜ மரியாதை வழங்கப்பட்டது.
மது அருந்தி இருக்கிறாரா என்பதை சோதிக்க ரத்த பரிசோதனைக்காக மைனர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது அங்கிருந்த டாக்டர்கள் அந்த மைனரின் ரத்தத்தையே மாற்றி அவர் மது அருந்தவில்லை என்று சான்றிதழ் வழங்கினர்.
சம்பவத்தின் போது மைனர் குடிபோதையில் இல்லை என்பதை உறுதிப்படுத்த மைனரின் இரத்த மாதிரிகளை மாற்றி மோசடி செய்ய முயன்றதாக மைனரின் தந்தை அகர்வால் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்டனர்.
விபத்துக்குப் பொறுப்பேற்குமாறு அவர்களது டிரைவரை வற்புறுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது. மைனர் சிறுவர் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

மைனர் கடந்த 2024ம் ஆண்டு மே 19ம் தேதி தனது நண்பர்களுடன் அதிகாலை வரை மது அருந்திவிட்டு மிகவும் ஆடம்பரமான போர்ஸ் காரை எடுத்துக்கொண்டு வீடு திரும்பியபோது இந்த விபத்து நடந்தது. இரண்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த மைனர் வாலிபருக்கு ஜாமீன் கேட்டு அவரது பெற்றோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. மனுதாரர் கடந்த 22 மாதங்களாக சிறையில் உள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டி அவருக்கு ஜாமீன் வழங்குவதாக கோர்ட் தெரிவித்தது. விசாரணை நீதிமன்றம் விதிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஜாமீன் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
மைனர் மகன் ஜாமீனில் வெளியில் வந்ததை அந்த வாலிபரின் தந்தை விஷால் அகர்வால் தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொண்டாடிய வீடியோ இப்போது வைரலாகி இருக்கிறது. அகர்வால் தனது மகன் மற்றும் மனைவியுடன் சேர்ந்து ஆடிப்பாடி தனது மகன் ஜாமீனில் வெளி வந்ததைக் கொண்டாடி இருக்கிறார்.
அதோடு இந்தக் கொண்டாட்டத்தில் தனது மகனுக்கு மாலை அணிவித்து தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார். கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த இரண்டு மாலைகளில் ஒன்று ரூபாய் மாலையாகும்.
ஆட்டம் பாட்டத்தில் அகர்வால் வேறொருவரால் தூக்கப்பட்டார். அதே நேரத்தில் அவரது மகன் தனது தாயாரைத் தூக்கி அவர்கள் நடனமாடினார்கள். இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.




















