"அப்போ அப்பாவின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை; இப்போ.."- மூன்றாவது டாக்டர் பட்டத்...
கறி சமைக்க `ஓசி'-யில் வாத்து கேட்ட போதை கும்பல் - தர மறுத்ததால் 100 வாத்துகளை வெட்டி வீசிய கொடூரம்!
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் காவல் நிலைய சரகத்திற்கு உள்பட்ட தருவை என்ற கிராமப்பகுதியில், மேல முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவர் வாத்துக்களை வளர்த்து தொழில் செய்து வருகிறார். அவரிடம் உள்ள வாத்துகள் இறைச்சிக்காக கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அத்துடன் வாத்து முட்டைகளையும் கேரளாவில் மிகுந்த விருப்பத்துடன் வாங்கிக் கொள்கின்றனர்.

அவரிடம் உள்ள வாத்துகளை, கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முப்பிடாதி என்பவர் தருவை பகுதியில் உள்ள வயலில் பராமரித்து வருகிறார். பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு வாத்துகளை அழைத்துச் செல்லும் அவர், இரவில் வயலில் போடப்பட்டுள்ள பட்டியில் அடைத்து பராமரித்து வருகிறார். இந்த நிலையில், 25-ம் தேதி மாலையில் குடி போதையில் வந்த சிலர் முப்பிடாதியிடம் இலவசமாக வாத்து கேட்டுள்ளனர். போதையில் இருக்கும் தாங்கள் சமைத்து சாப்பிட இலவசமாக பார்த்து கொடுக்குமாறு தகராறு செய்துள்ளனர்.
வாத்து உரிமையாளர் கூறாமல் யாருக்கும் இலவசமாக கொடுக்க முடியாது என முப்பிடாதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரத்துடன் அவர்கள் தகராறு ஈடுபட்டதும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தலையிட்டு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். தாங்கள் கேட்டும் இலவசமாக வாத்துக் கொடுக்காத ஆத்திரத்தில் இருந்த அந்த கும்பல் நேற்று (26-ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு மீண்டும் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அரிவாள் கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்ற அந்த கும்பல், முப்பிடாதியின் எதிர்ப்பையும் மீறி வாத்துகளை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அத்துடன் கொடூரமாக கம்பால் தாக்கியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்ட வாத்துக்கள் கொல்லப்பட்டன. மேலும் பலத்த காயமடைந்த 45 வாழ்த்துக்கள் உயிருக்கு போராடி வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னீர்பள்ளம் காவல் நிலையத்தில் முப்பிடாதி புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், தருவையைச் சேர்ந்த மாயா, ராஜேஷ், ஹரி மற்றும் சேரன்மகாதேவியை சேர்ந்த சோனு ஆகியோருக்குத் தொடர்வு இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதில் ராஜேஷ், மாயா ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஹரி, சோனு ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். ஓசிக்கு வாத்து கொடுக்க மறுத்ததால் நூற்றுக்கும் அதிமமான வளர்ப்பு வாத்துகளை போதைக் கும்பல் கொடூரமாக வெட்டிக் கொன்ற சம்பவம் முன்னீர்பள்ளம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















