RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" - கம்ம...
Doctor Vikatan: 65 ப்ளஸ் வயதில் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்வது பாதுகாப்பானதா?
Doctor Vikatan:என் வயது 67. சர்க்கரைநோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இல்லை. ஆரோக்கியமாகவே இருக்கிறேன். ஆனாலும், உடலியக்கம் குறைந்துவிட்டதால், ஏதேனும் உடற்பயிற்சி செய்யலாம் என தோன்றுகிறது.
சோஷியல் மீடியாவில் 70, 80 வயதுக்காரர்கள்கூட ஜிம்மில் வொர்க் அவுட் செய்வதைப் பார்க்கிறேன். 65 ப்ளஸ் வயதில் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சிகள் செய்யலாமா... ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகள் செய்வது பாதுகாப்பானதா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவரும், தீவிர சிகிச்சை நிபுணருமான மகாதேவன்

உடற்பயிற்சிகளை கார்டியோ பயிற்சிகள், ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகள் என இரண்டாகப் பிரிக்கலாம். வாக்கிங், ஜாகிங், ஸ்விம்மிங், சைக்கிளிங்... இவையெல்லாம் கார்டியாக் பயிற்சிகளில் வரும்.
ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சி என்பது குறிப்பிட்ட தசைகளை மேலும் வலுப்படுத்துவதற்கானது. அந்தத் தசைகளை மேலும் ஆக்டிவேட் செய்வதற்கான பயிற்சிகள் அவை.
ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளை வயதானவர்களும் செய்யலாம். ஆனால், அதற்கு முன் அவர்கள் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் வேலையாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவர் உங்களை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு, உடல்நலம் குறித்த தகவல்களைக் கண்டறிவார்.
ரத்த அழுத்தம், பல்ஸ் போன்றவற்றைப் பார்ப்பார். நீங்கள் ஏற்கெனவே ஏதேனும் மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தால் அவற்றில் மாற்றம் தேவையா என்றும் பார்ப்பார்.
அடிப்படையான பிளட் டெஸ்ட், இசிஜி, எக்கோ, டிரெட்மில் டெஸ்ட், மூட்டுகளுக்கான பரிசோதனை போன்றவற்றைச் செய்யச் சொல்வார்.

ஸ்ட்ரென்த் டிரெய்னிங் பயிற்சிகளால் நிச்சயம் பலன் உண்டு என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், அந்தப் பயிற்சிகளால் உடலில் அடிபடவோ, காயம் ஏற்படவோ கூடாது என்பது அதைவிடவும் முக்கியம்.
எனவே, வயதானவர்கள் ஜிம்மில் சேர்ந்து வொர்க்அவுட் செய்யக்கூடாது என அர்த்தமில்லை. அது பாதுகாப்பானதுதானா, யாருக்கு, எந்த மாதிரி பயிற்சிகள் தேவை என்பதை மருத்துவர் மற்றும் ஃபிட்னெஸ் பயிற்சியாளரோடு பேசி, தெளிவுபெற்ற பிறகு செய்வதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.





















