RR VS SRH: "சாதனைகளை விட கோப்பையை வெல்வதே என் ஒரே இலக்கு!" - ஆட்டநாயகன் வைபவ் சூ...
RR VS SRH: "கொஞ்சம் முயன்றிருந்தால் முதல் 2 இடங்களுக்குள் வந்திருக்கலாம்" - கம்மின்ஸ் வருத்தம்
ஐபிஎல் 2026 நேற்றைய (மே 27) தொடரின் முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, குவாலிபையர் 1 போட்டியில் தோல்வி அடைந்த அணியுடன் விளையாடும் வாய்ப்பைப் பெறும்.
அதே நேரத்தில், தோல்வி அடையும் அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறும் என்பதால் இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 243 ரன்கள் குவித்தது. இந்த இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணி, இறுதிவரை போராடினாலும் முக்கியமான தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.
தோல்விக்குப் பிறகு பேசிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், "டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக இருந்தது. ஆட்டத்தின் இறுதிவரை ஆடுகளத்தின் தன்மையும் நன்றாகவே இருந்தது.
எங்கள் அணியில் பிரஃபுல் மற்றும் சாகிப் உசேன் போன்ற இளம் வீரர்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டனர். இந்த ஆண்டு பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற அணிகளிலேயே எங்களது அணிதான் அதிக இளம் வீரர்களைக் கொண்ட அணி என்று நினைக்கிறேன்.
இளம் வீரர்களின் திறமையைக் கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிய பயிற்சியாளர்களுக்குப் பாராட்டுகள். ஒரு கேப்டனாக அவர்களின் ஆட்டத்தைப் பார்ப்பது பெருமையாக இருக்கிறது.
243 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தும்போது அனைத்துச் சூழல்களும் எங்களுக்குச் சாதகமாக அமைய வேண்டும். நாங்கள் பெரும்பாலான ஓவர்களில் தேவையான ரன் ரேட்டைத் தக்கவைத்துக்கொண்டே வந்தோம்.

ஆனால், தவறான நேரங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது எங்களுக்குப் பின்னடைவாக அமைந்துவிட்டது. இருந்தாலும், நாங்கள் கடைசி பந்து வரை மிகக் கடுமையாகப் போராடி எங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தினோம்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளோம். இன்னும் ஒரு சிறிய படி முன்னால் சென்றிருந்தால் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் வந்திருக்கலாம்.
இந்த ஆண்டு முழுவதும் வீரர்கள் காட்டிய உத்வேகமும் விளையாடிய விதமும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது," என தெரிவித்தார்.




















