மேகதாது அணை: "தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் துடிக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு" - ...
கோலியின் 'No Handshake' எல்லை மீறிய ரசிகர்கள்! - ட்ராவிஸ் ஹெட் மனைவிக்கு தொடரும் சோகம்!
ஐபிஎல் 2026-ன் பிளேஆஃப் தகுதியைப் பொறுத்தவரை, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு முக்கியத்துவமற்ற போட்டியாகவே பார்க்கப்பட்டது. ஆனால், விராட் கோலி மற்றும் டிராவிஸ் ஹெட் இடையேயான தனிப்பட்ட மோதலால், இந்தப் போட்டி யாரும் எதிர்பாராத வகையில் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டி முடிந்ததும் கோலி, ஹெட்டுக்கு கை கொடுக்க மறுத்த சம்பவம் இணையத்தில் தீயாகப் பரவியது. அதன் விளைவாக, ஹெட் மனைவி ஜெசிகா சமூக வலைதள தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

கோலி கை கொடுக்க மறுத்தது ஏன்?
ஹைதராபாத் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆர்சிபி தோல்வியைத் தழுவியது. போட்டி முடிந்ததும் வீரர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். ஆனால், டிராவிஸ் ஹெட் கை கொடுக்க வந்தபோது, விராட் கோலி அவரைப் புறக்கணித்துவிட்டுச் சென்றார்.
களத்தில் அப்படி என்னதான் நடந்தது?
முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான், வர்ணனையின் போது நடந்த சம்பவங்களை விவரித்தார். "ஆஸ்திரேலியர்கள் விளையாடுவதைப் போலவே, களத்தில் ஆக்ரோஷமாக விளையாடுவதை விராட் கோலியும் விரும்புவார். இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் நடந்தது.

முதலில் ஹெட், கோலியை பெரிய ஷாட் அடிக்கவில்லையா என கேள்வி கேட்டார்.
'நீ ஒரு இம்பாக்ட் பிளேயர் தானே, வெளியே போகாமல் பந்து வீச வா' என்று கோலி ஹெட்டை வம்பிழுத்தார். இந்த வார்த்தைப் போர் தான், போட்டி முடிந்ததும் கை கொடுக்க மறுத்ததற்குக் காரணம்," என்று இர்பான் பதான் குறிப்பிட்டார்.
களத்தில் நடக்கும் இது போன்ற ஆக்ரோஷமான நிகழ்வுகள் இயல்பானவை என்றாலும், அதன் பின்விளைவுகள் எல்லை மீறிவிட்டன.
எல்லை மீறிய ரசிகர்கள்!
கோலிக்கும் ஹெட்டுக்கும் இடையேயான மோதல் களத்தோடு முடியவில்லை. கோலியின் ரசிகர்கள் இந்த விஷயத்தை ஹெட்டின் மனைவி ஜெசிகாவின் பக்கம் திருப்பியதுதான் சோகத்தின் உச்சம். சமூக வலைதளங்களில் ஜெசிகாவை நோக்கி மிக மோசமான கருத்துகளும், மிரட்டல்களும் குவிந்தன. களத்தில் வீரர்கள் வெளிப்படுத்தும் ஆக்ரோஷத்தை, அவர்களின் குடும்பத்தினர் மீது வன்மமாகக் காட்டுவது தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.

தொடரும் சோகம்... ஜெசிகாவின் வேதனை!
இது ஜெசிகாவுக்கு முதல் முறையல்ல. 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவை டிராவிஸ் ஹெட் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்தபோதும், இதே போன்ற மோசமான தாக்குதல்களை அவர் எதிர்கொண்டார். தற்போதைய சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய ஊடகமான 'தி அட்வர்டைசர்' இடம் பேசிய ஜெசிகா, "உலகக் கோப்பைக்குப் பிறகு நடந்த அதே போன்ற நிகழ்வுகள் மீண்டும் நடப்பதாக உணர்கிறேன். என் சமூக வலைதளப் பக்கங்கள் மோசமான செய்திகளால் நிரம்பி வழிகின்றன. நாங்கள் நலமாக இருக்கிறோம், ஆனால் அவர்கள் என் நண்பர்களையும் குடும்பத்தினரையும் தாக்குகிறார்கள்," என்று வேதனையுடன் கூறினார்.
மேலும் அவர், "விளையாட்டில் உணர்ச்சிவசப்படுவது இயல்புதான். ஆனால், வீரர்களுக்குப் பின்னால் உண்மையான மனிதர்களும், அவர்களின் குடும்பங்களும் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மனநலம் குறித்த விழிப்புணர்வும், ஒருவருக்கொருவர் பேசும் விதத்தில் கண்ணியமும் அவசியம். இந்தச் சம்பவம் அனைவரிடமும் மேலும் கருணையையும் ஆதரவையும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்," என்று உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.
ஆர்சிபி மற்றும் எஸ்ஆர்ஹெச் ஆகிய இரு அணிகளும் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்த ஐபிஎல் தொடரிலேயே மீண்டும் ஒருமுறை இவ்விரு அணிகளும் மோத வாய்ப்புள்ளது. அதனால், களத்தில் இந்த மோதல் தொடரலாம், ஆனால் ரசிகர்களின் அணுகுமுறை மாறுமா என்பதே தற்போதைய கேள்வி.

















