பழனி: புகார் அளிக்க வந்த பெண்ணிற்கு ஆபாச மெசெஜ்; எஸ்.ஐ பணியிடை நீக்கம்!
செய்தியாளர் சந்திப்பில் ஐ.ஜி ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்தது ஏ.ஐ. வீடியோவா? – நடந்தது என்ன?
கோவையில் 10 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பந்தய சாலை பகுதியில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யபாரதி நேற்று முந்தினம் மாலை 3.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பதாக காவலதுறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்காக 3 மணிக்கு முன்பே செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் அவரது அலுவலகத்தில் குவிந்தனர். செய்தி தொலைக்காட்சிகள் லைவ் செய்வதற்காக கேமராவுடன் காத்திருந்தனர்.
3 மணியளவில் ஐ.ஜி. ரம்ய பாரதி செய்தியாளர் சந்திப்பிற்கு வந்தார். மற்ற அதிகாரிகள் வர வேண்டும் என்பதற்காக செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் காத்திருந்தார். அப்போது கையில் வைத்திருந்த செய்தி அறிக்கையை தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.
3.25 மணியளவில் மற்ற அதிகாரிகள் வந்ததும் வழக்கு தொடர்பாக பேச வேண்டியிருப்பதால், செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களை அறைக்கு வெளியே சென்று காத்திருக்குமாறு போலீசார் கூறினர். அப்போது கேமராவில் இருக்கும் ஆடியோவையும் கட் செய்யுமாறு போலீசார் கூறியதால், அதன்படி ஒளிப்பதிவாளர்கள் ஆடியோவை கட் செய்துவிட்டு வெளியேறினர்.

அப்போது, அதாவது செய்தியாளர் சந்திப்புக்கு முன்னர், அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த ஐ.ஜி.ரம்யபாரதி குலுங்கி குலுங்கி சிரித்துள்ளார். அது அங்கு வைக்கப்பட்டு இருந்த சில தொலைக்காட்சிகளின் கேமராக்களில் லைவ்வாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இது ஏ.ஐ-யால் சித்தரிக்கப்பட்ட போலி வீடியோ என ஒரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் பல கேமராக்களிலும் ஐ.ஜி.ரம்யபாரதி சிரிக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதால், இது ஏ.ஐ. வீடியோ அல்ல என்பது தெரியவந்துள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் செய்தி அறிக்கையை மட்டுமே வாசித்த ஐ.ஜி. ரம்யபாரதி செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காமல், ’கடைசி கேள்வி’, ‘கடைசி கேள்வி’ என செய்தியாளர் சந்திப்பை முடிக்க வேண்டும் என்பதிலேயே மும்முரமாக இருந்தார். பின்னர் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகளுக்கு அவர் ஆங்கிலத்தில் பேட்டி அளித்ததும், 4 மணியளவில் செய்தியாளர் சந்திப்பு நிறைவடைந்தது.
















