விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா மெஹந்தி க்ளிக்ஸ்!| Photo Album
போனை பிளாக் செய்த காதலன்: விரக்தியில் மும்பை ரயிலிலிருந்து கடலில் குதித்த பெண்.. காப்பாற்றிய மீனவர்!
இன்று காலை, மும்பை புறநகர் ரயிலில் இருந்து ஒரு பெண் மும்பை கடலுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்றார். ரயில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து வாஷி நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயில் வாஷி கடல் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, இளம்பெண் ஒருவர் ரயிலில் இருந்து கடலுக்குள் குதித்துவிட்டார்.
உயிரை காப்பாற்றிய பேக்
இதனை தூரத்தில் நின்று கொண்டிருந்த மகேஷ் என்ற மீனவர் பார்த்தார். அவர் ரயிலில் இருந்து ஏதோ விழுந்ததைப் பார்த்து உடனே, தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு கடல் பாலம் இருந்த பகுதிக்கு படகில் வந்தார். அங்கு வந்து பார்த்தபோது இளம்பெண் ஒருவர் கடலில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

அப்பெண் தனது தோளில் மாட்டி இருந்த பேக்கோடு கடலில் குதித்து இருந்தார். அந்த பேக்கிற்குள் காற்று இருந்துள்ளது. இதனால் அப்பெண் கடலுக்குள் மூழ்காமல் இருந்துள்ளார். அவர் வைத்திருந்த பேக்கில் இருந்த காற்று அப்பெண்ணை தண்ணீரில் மூழ்க விடாமல் தடுத்திருந்தது. அப்பெண்ணை மகேஷ் தனது நண்பர்களுடன் சேர்ந்து மீட்டு கரைக்கு அழைத்து வந்தார். அப்பெண் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
போனை பிளாக் செய்த காதலன்
அவரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் அவர் தெரிவித்த கருத்து, போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செம்பூரை சேர்ந்த மனீஷா (20) என்ற அப்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அப்பெண்ணை காதலித்த நபர், திடீரென எந்த வித காரணமும் சொல்லாமல் அவரது போன் நம்பர் மற்றும் சமூக வலைதள பக்கத்தை பிளாக் செய்துவிட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகி இக்காரியத்தில் ஈடுபட்டதாக அப்பெண் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து போலீஸார் அப்பெண்ணிற்கு விளக்கி கூறினர். அதோடு அவருக்கு டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுத்தனர்.




















