பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசமா, 24 மணிநேர அவகாசமா? - அன்று எடியூரப்பாவ...
மதுரை: "தேர்தலைக் காரணம் காட்டி நெல் கொள்முதல் செய்யவில்லை" - அழுகிய நெல்லுடன் விவசாயிகள் கண்ணீர்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் பெரியார் பாசன கால்வாய் மற்றும் கிணற்று பாசனம் மூலம் நெல் நடவு செய்து தற்போது அறுவடை பணிகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடந்து வருகின்றன.
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்த நெல்களை கோட்டைமேட்டில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு கொட்டப்பட்டன.
ஆனால் தற்போது வரை கொள்முதல் செய்யப்படாமல் சுமார் 10,000 மேற்பட்ட நெல் மூட்டைகள் வெட்ட வெளியில் கொட்டி கிடப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
மேலும் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக நெல் மூட்டைகள் மற்றும் நெற்குவியல்கள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதமடைந்து வருகின்றன.

இதுகுறித்து போடிநாயக்கன்பட்டி விவசாயிகள் கூறுகையில், "கடந்த 20 நாட்களுக்கு முன்பு நெல்லை அறுவடை செய்து கொள்முதல் நிலையங்களில் கொண்டு வந்து கொட்டி உள்ளோம். பல விவசாயிகளின் நெல்கள் மூடைகளாகக் கட்டி வைக்கப்பட்டுள்ளன. சிலருக்கு சாக்கு வரவில்லை எனக்கூறி நெல் குவியலாகக் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
நெல் கொள்முதல் நிலையத்தை நடத்துபவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியாததால் எந்த அதிகாரியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற விவரமும் தெரியவில்லை. இதனால் 20 நாள்களுக்கு மேலாக கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக நெல்களைக் காவல் காத்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருவதால் நெல் மழையில் நனைந்து, அழுகி வருகிறது.

மேலும் பகலில் வெயில் அடிக்கும் போது நெல் மூட்டைகள் காய்ந்து உள்ளே இருக்கும் நெல்கள் வெளியே கொட்டி கிடப்பதைப் பார்க்கையில் எங்களுக்கு கண்ணீர் வருகிறது. என்ன செய்வதென்றே தெரியாத நிலையில் 20 நாள்களாக தினசரி நெல்களை உலர்த்தி காய வைத்தும் மூடைகளைப் புரட்டி மாற்று இடத்தில் வைத்தும் வேலையைச் செய்து வருகிறோம்.
தேர்தலைக் காரணம் காட்டி அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதை காலம் தாழ்த்தி வந்தனர். தற்போது தேர்தலும் முடிந்து விட்டது நெல்லை கொள்முதல் செய்வதற்கு வழியில்லை.
ஏக்கருக்கு ரூ. 30,000 முதல் ரூ. 40,000 வரை செலவு செய்த நிலையில் ஒவ்வொரு விவசாயிக்கும் மூன்று முதல் நான்கு லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகையால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல்களை குடோன்களுக்கு கொண்டு செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசைக் கேட்டுக்கொள்கிறோம்" என்றனர்.


















